Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12-07-2022

இன்றைய தியானம்(Tamil) 12-07-2022

 

இக்காலப் பாடு 

 

“ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” - பிலிப்பியர் 1:29 

 

செர்ஜி தன் நாட்டைக் குறித்த பற்றுதலில் தீவிர வைராக்கியம் உடையவன். கம்யூனிசக் கொள்கைகளிலும், ரஷ்யாவின் கோட்பாடுகளிலும் மிகவும் ஈர்க்கப்பட்டவனாகக் காணப்பட்டான். ரஷ்யாவின் ரகசிய உளவுப்பிரிவு போலீசில் குறிப்பிட்ட பகுதியில் தலைவனாக இருந்து கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதும் அடித்து சிறையில் தள்ளுவதுமே செர்ஜியின் பிரதான வேலையாக இருந்தது. மறைவான ஒரு பகுதியில் கிறிஸ்தவர்கள் கூடி ஜெபிக்கிறார்கள் என்பதை அறிந்து தன்னுடைய குழுவோடு அங்கே விரைந்தான். விசுவாசிகள் எதிர்பாராத நேரத்தில் உள்ளே நுழைந்து அனைவரையும் அடிக்கத் தொடங்கினான். அதில் நடாஷா என்னும் இளம் பெண்ணையும் அடித்து சித்திரவதைப் படுத்தினான். செர்ஜிக்கு இப்போது உள்மனதில் அளப்பறியா சந்தோஷம்! இனிமேல் இவர்கள் எங்கும் கூடி ஜெபிக்க மாட்டார்கள் என்று! மறுவாரத்தில் மீண்டும் வேறொரு இடத்தில் கிறிஸ்தவர்கள் சிறு குழுவாக ஜெபிக்கிறார்கள் என்பதை அறிந்து, செர்ஜி அங்கேயும் சென்று ஜெபிக்கிறவர்களை தடை செய்து அடிக்கத் தொடங்கினான்.

 

இப்பொழுது செர்ஜிக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முந்தின வாரத்தில் துன்புறுத்தின கிறிஸ்தவக் கூட்டத்திலிருந்து நடாஷா என்னும் பெண் காயங்களோடு இக்கூட்டத்திற்கு வந்திருந்தாள். வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கு சென்று அவன் தன் முரட்டுக் கைகளால் அவள் முதுகில் ஓங்கிக் குத்தினான். பின்பு ஒரு நாள் மீண்டும் வேறொரு கூட்டத்திலும் செர்ஜி, நடாஷாவைக் கண்டான். நடாஷாவின் உறுதியான வழிபாடும் ஜெபமும் செர்ஜியின் உள்ளத்தில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது. சில வாரங்களில் செர்ஜியும் தேவனுடைய அன்பிற்குள் கொண்டு வரப்பட்டான்.

 

ஒரு வாலிபப் பெண்ணின் அசையாத கிறிஸ்தவ நம்பிக்கை முரட்டுத்தனமான மனிதனைக் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினது. சில நேரங்களில் வரும் மிகுந்த உபத்திரவங்கள் தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வருகிறது என்பதை நாம் அறியாதிருக்கிறோம். ரிச்சர்ட் உம்பிராண்ட் அவர்கள் கூறும்போது “சிறைச்சாலை அனுபவங்கள் தங்களுக்கு வேதனையைக் கொடுக்கவில்லை; மாறாக அனேக சிறைக் கைதிகள் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு தங்களை ஆண்டவரே சிறைச்சாலைக்குள் வழி நடத்தினார்” என்று எழுதுகிறார். இந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களில் அநேகர் உபத்திரவத்தின் குகைகளில் சென்று கொண்டிருக்கலாம். தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே இப்பொழுது உள்ள பாடுகளில் சோர்ந்து போகாதிருங்கள், பின் வாங்காதீர்கள். உங்களுக்கு நேரிடுகிற உபத்திரவங்கள் உங்களுக்கு மகிமையையும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் மாற்றங்களையும் கொண்டு வரும் என்பது நிச்சயமே! ஆகையால் இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படப் போகும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று சொல்லும் வசனமே உண்மையாகும்.

- P.ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு:

சங்கிலித்தொடர் ஜெபத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் ஜெப ஆவியினாலும், ஆத்தும பாரத்தினாலும் தேவன் நிரப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)