இன்றைய தியானம்(Tamil) 02.09.2024
இன்றைய தியானம்(Tamil) 02.09.2024
FILL UP
“எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” - எபேசியர் 1: 23
நாம் பள்ளியில் படிக்கும் நாட்களில், வினாதாளில் கோடிட்ட இடத்தை நிரப்புக என ஒரு கேள்வி வரும். அதில் பதில் எழுத ஒரு சிறு கோடு போட்டிருப்பார்கள். ஒரு வார்த்தை எழுதினால் அந்த இடம் நிரப்பப்படும். அந்த இடம் நிரப்பப்பட்டால் அந்த வாக்கியம் பூர்த்தியாகும். இது போல தான் தேவன் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர். நம்மை நம் இடத்தில் நிரப்பியுள்ளார். நாம் இதிலிருந்து தவறும் போது அல்லது விலகிச் செல்லும் போது தேவன் அந்த இடத்தில் இருந்து நம்மைத் தூக்கி விடுகிறார். நாம் தேவ சித்தத்திற்கு மாறாக செல்லும் போது உடனே வேறு ஒருவரைக் கொண்டு அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறார். அதாவது சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் தேவனை மனஸ்தாபப்பட செய்கிறார். உடனே தேவன் இராஜா ஸ்தானத்திலிருந்து அவனைத் தள்ளி விடுகிறார். அந்தப் பதவிக்கு வேறொருவனைக் கொண்டு நிரப்ப தேடி தாவீதை தேர்ந்தெடுக்கிறார். சவுலின் காலியான இடத்தை நிரப்ப தாவீதை அபிஷேகிக்கிறார்.
அதுபோல வஸ்தி ராஜா விருந்து செய்து அழைத்த போது வர மறுக்கிறாள். ராஜாவின் சொல்லுக்கு கீழ்படியாததினால் தன் ராஜஸ்திரி பதவியிலிருந்து தூக்கப்படுகிறாள். அந்த இடத்தை நிரப்ப மாகாணத்தில் உள்ள அழகான ஸ்திரிகள் அழைக்கப்படுகின்றனர். அதில் எஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டு வஸ்தியின் இடத்தில் நிரப்பப்படுகிறார். இந்த இடம் எஸ்தரின் அழகு, அந்தஸ்து, அறிவிற்கான இடமல்ல. வஸ்தி அவமதித்து தள்ளப்பட்டதினால் காலியான இடத்தில் நிரப்பப்பட்டவள். ஒரு பெரிய ஆபத்தான காரியம் ஆமானால் வருகிறது. அப்போது மொர்தெகாய் சொல்கிறார். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாய் இருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே என்கிறார். மேலும் நீ இந்த காலத்தில் மௌனமாயிருந்தால் யூதருக்கு இரட்சிப்பு வேறொரு இடத்தில் இருந்து வரும் என்கிறார். அதாவது நீ தள்ளப்படலாம் வேறொருவரால் நிரப்பப்படலாம் என்கிறார்.
இதை வாசிக்கும் அன்பரே! இப்போது நீங்கள் இருக்கிற பதவி, வாய்ப்பு எல்லாம் உங்கள் திறமைக்கு, தகுதிக்கு கிடைத்ததல்ல. யாரோ ஒருவர் அந்த இடத்தை தவறாக பயன்படுத்தியதின் நிமித்தம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் நீங்கள் இந்த இடத்தில் இருந்து தள்ளப்பட்டு வேறொரு வேறொருவருக்கு இதை தருவது தேவனுக்கு லேசான காரியம் என்பதை மறந்து விடக்கூடாது. அதனால் நமக்குக் கொடுக்கப்பட்ட காரியத்தில் வேதம் வாசித்து, ஜெபித்து தேவனோடுள்ள உறவில் நிலைத்திருந்து கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு ஜாக்கிரதையாயிருப்போம் தேவன் நம்மை வைத்திருக்கும் இடத்தை பயபக்தியோடு தக்க வைத்துக்கொள்வோம். இந்த எண்ணம் நமக்குள் இருந்தால் பெருமை, மேட்டிமை, அஜாக்கிரதை வராது. ஜாக்கிரதையாய் செயல்படுவோம். கர்த்தருக்குள் நிலைத்திருப்போம்.
- Bro. K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864