Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 09-07-2022

இன்றைய தியானம்(Tamil) 09-07-2022

 

என்னை உருக்கினால்...

 

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; ...” - மத்தேயு 5:14

 

ஒரு எஜமானனின் வீட்டறையில் நிறைய மெழுகுவர்த்திகள் வைக்கப் பட்டிருந்தன. அவைகள் ஒவ்வொன்றும் அழகு வர்ணங்களிலும், விதவிதமான வடிவங்களிலும், பல்வேறு அளவுகளிலும் இருந்தன. இவைகளில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் மிகவும் சிறியதாகவும், அலங்காரமில்லாமல், நிறமற்று சாதாரணமாகவும் இருந்தது. இது மற்ற மெழுகுவர்த்திகளைப் பார்த்து “நான் அவைகளைப் போல் அழகாகவோ, பெரிய அளவிலோ இல்லாமல், அழகில்லாத உருவமாக இருக்கின்றேனே. என்னை மட்டும் ஏன் இப்படி உருவாக்கினார்கள்? என்னை யார் விரும்புவார்கள்” என்று எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டு வருத்தத்தோடே இருந்தது.

 

ஒருநாள் இரவில் மின்விளக்குகள் யாவும் திடீரென்று அணைந்துபோகவே, வீட்டெஜமான் கையில் தீப்பெட்டியுடன் மெழுகுவர்த்திகள் இருக்கும் அறைக்குள் வந்தார். அறைக்குள் இருந்த மெழுகுவர்த்திகள் அனைத்தும் “யாரை எஜமான் இன்று பயன்படுத்தப்போகிறார்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. எஜமானரோ மிகவும் சாதாரணமான மெழுகுவர்த்தியை எடுத்துப் பற்ற வைத்து அறையின் நடுவில் அதை வைத்தார். இருள் நிறைந்த அந்த அறை, தன்னால் மிகுந்த பிரகாசமடைந்ததைக் கண்டு அந்த மெழுகுவர்த்தி மிகவும் சந்தோஷமடைந்தது. அப்போதுதான் அந்தச் சாதாரண மெழுகுவர்த்திக்கு ஒரு உண்மை விளங்கியது. “நான் உருவாக்கப்பட்ட நோக்கமே எரிந்து, உருகி, ஒளி கொடுத்து இருளை அகற்றத்தானே. இதற்கெல்லாம் ஏன் அழகான நிறமும், பெரிய அளவு உருவமும் வேண்டும். இவை யாவும் எரிந்து பிரகாசிக்கும்போது கரைந்து அழிந்து போகக்கூடியதுதானே. நான் எரிந்து பிரகாசித்து இருளை அகற்றுவேன் என்பதே என் எஜமானனின் எதிர்பார்ப்பு, அவரின் நோக்கத்தை இன்று நிறைவேற்றி இருளை அகற்ற உபயோகமானேன்” என்று பேரானந்தம் அடைந்தவாறே உருகிக் கரைந்து போயிற்று.

 

மத்தேயு 7:21-ஆம் வசனம் இவ்வாறாகக் கூறுகிறது, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனேயல்லாமல், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்?” என்று. நாம் ஒவ்வொருவருங்கூட, நமக்கு உலக ஐசுவரியங்களும், அழகும் இருக்கிறதோ இல்லையோ, படித்துப் பட்டம் பெற்றவர்களோ இல்லையோ, இவைகளைக் குறித்தெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எல்லாமிருந்தும் எரிந்து பிரகாசிக்க முடியாத நிலையிலுள்ள மெழுகுவர்த்திகள் போல் இல்லாமல் சாதாரணமானவைகளிலிருந்தும் எரிந்து பிரகாசிக்கும் மெழுகுவர்த்தியாகவே நம்மைப் படைத்தவரின் நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ்வோம்!

- Mrs.ஜெபக்கனி சேகர் 

 

ஜெபக்குறிப்பு:

கோவில்பட்டியில் இன்று நடைபெறவுள்ள எழுப்புதல் விரும்புவோர் முகாமில் எழுப்புதலை வாஞ்சிப்போர் கலந்துகொள்ள: தேவ நாமம் மகிமைப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)