Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 26.07.2024

இன்றைய தியானம்(Tamil) 26.07.2024

 

எல்காத் அசூரிம்

 

“…ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால்…” - கலாத்தியர் 5:15

 

எல்காத் அசூரிம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு இடம். ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போம். அங்கே ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள். அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் எனப்பட்டது. விழுகின்ற அனுபவம். தாவீதின் காலத்தில் யோவாபின் படைவீரர்களுக்கும், அப்நேரின் படைவீரர்களுக்கும் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் யாருடைய கையிலும் பாதுகாக்கும் கேடயம் இல்லை. மாறாக தாக்கும் பட்டயமே இருந்தது. இதனால் ஒருவரையொருவர் குத்தி மாண்டு போயினர்.

 

ஒருவரையொருவர் வெறுக்கின்றவர்களின் நிலைமையும் இப்படியே இருக்கிறது. அவர்கள் மற்றவர்களின் வெறுப்பின் செயல்களால் வரும் பாதிப்புகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மனம் நோகச் செய்தவர்களை மனம் நோகச் செய்தல், கண்டு கொள்ளாதவரைக் கண்டு கொள்ளாமலிருத்தல், மட்டந்தட்டுகிறவரை மட்டந்தட்டுதல், கனப்படுத்தாதவரை கனப்படுத்தாதிருத்தல், உதவி செய்யாமல் போனவருக்கு உதவி செய்யாமலிருத்தல், அன்பு காட்டாதவருக்கு அன்பு காட்டாமலிருத்தல், புறங்கூறியவரைப் பற்றி புறங்கூறுதல் போன்ற இவையாவும் எல்காத் அசூரிம் எனப்படும்.

 

பிரியமானவர்களே! நண்பர்களுக்குள்ளும் பல குடும்பங்களிலும் இன்றும் இப்படித்தான் நடந்து வருகின்றது. நாம் எப்படி இருக்கிறோம்? நம்முடைய காயத்தை ஆற்றிட தேவ கிருபையை நாடாமல் காயப்படுத்திய நபரை காயப்படுத்துவதிலேயே குறியாயிருக்கிறோமா? அன்பு, பொறுமை, தாழ்மை, சாந்தம் ஆகிய கேடயங்களைக் கொண்டு நம்மை பாதுகாத்துக் கொள்கிறோமா? சிந்திப்போம். தீமையை நன்மையால் வெல்லுதலும், ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தைக் காட்டுவதும் இயேசுகிறிஸ்து நம் முன் வைக்கும் வாழ்க்கைமுறை. மேலே சொன்ன வசனத்திலுள்ளதுபோல ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் அழிந்துபோய் விடுவோம். மனந்திரும்புவோம், சமாதானமாய் வாழ்வோம்.

 

கிறிஸ்து இயேசுவிலுள்ள சிந்தையே நம் ஒவ்வொருவரிலும் இருக்கக்கடவது. ஆமென்!

- A. பாத்திமா

 

ஜெபக்குறிப்பு.

தோழமை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)