இன்றைய தியானம்(Tamil) 16.07.2024
இன்றைய தியானம்(Tamil) 16.07.2024
பொருத்தனையின் மகன்
“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” - நீதி. 22:6
கோட்டா - உருசில்லா தம்பதியினர் செல்லமாய் வளர்த்த ஒரே பிள்ளையை இழந்து வாடினார்கள். டிசம்பர் மாதம் ஜெர்மனியில் குளிர் அதிகமாக இருந்தது. அந்த குளிரின் நடுவே ஓர் இனிய பாடலின் சத்தம் அவர்கள் காதில் ஒலித்தது. “ஏழைப் பிள்ளையாயினும் கர்த்தர் அன்னவஸ்திரம் தந்து காக்கிறார். என்னில் நேசம் வைக்கிறார். இங்கிருக்கும் நாளெல்லாம் என்னை ஆசீர்வதிப்பார், ஜீவன் போகும் நேரத்தில் சேர்த்துக்கொள்வார் மோட்சத்தில்” என்ற கீதத்தை நடுங்கும் குளிரில் பாடினான் ஒரு சிறுவன். பாடலைக் கேட்ட அத்தம்பதியினர் வீட்டின் கதவைத் திறந்தால் ஒரு ஏழைச் சிறுவன் நடுங்கும் குளிரில் பாடிக் கொண்டிருந்தான்.
அவனை வீட்டிற்குள் அழைத்து உன் பெற்றோர்கள் எங்கே என்று விசாரித்து நீ எங்கே இருந்து வருகிறாய்? எனக் கேட்டபோது, நான் ஒரு ஏழை. என்னோடு பிறந்தவர்கள் ஏழு பேர் நான்தான் முதல் பிள்ளை. என்னை என் பெற்றோர் பிறந்த அன்றே கர்த்தருக்கென்று அர்ப்பணித்தார்கள். படிக்க ஆசை, ஆனால் என் பெற்றோரால் முடியவில்லை. அதனால் இந்த ஜீவனுள்ள பாடலைப் பாடி பிச்சை எடுத்து பள்ளியில் படிக்கிறேன் என்று கூறினான். அத்தம்பதியினர் அந்த சிறுவனைத் தத்தெடுத்து படிக்க வைத்தனர். பல வருடங்கள் ஓடின. அந்த சிறுவன் படித்துப் பெரியவனாகி உயர்ந்த பட்டங்களையெல்லாம் பெற்றார். உயர்ந்த பதவிகள் அவரைத் தேடி வந்தன. ஆனால் அவனோ அவற்றையெல்லாம் உதறிவிட்டு தன் பெற்றோரின் பொருத்தனைகளை நிறைவேற்றினான். அவர்தான் சீர்திருத்தலின் நட்சத்திரம் என்று பெயர் பெற்ற மார்ட்டின் லூத்தர். தாய் தன் சிறுவயதில் கற்றுக்கொடுத்த நம்பிக்கையின் பாடல், அவன் தலைமுறைக்கே அடைக்கலம் கிடைத்தது. இப்படி மார்ட்டின் லூத்தருக்கு சிறுவயதில் அவரது தாய் கற்றுக் கொடுத்த காரியங்கள் அவரை உருவாக்கியது. சிறுவயதில் ஆலயத்தில் விடப்பட்ட சாமுவேல் பணிவிடை செய்ததோடு அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட காரியங்களைக் கேட்டு அதின் படி வாழ்ந்ததால் பெரிய தீர்க்கதரிசியாக உயர்ந்தார்.
எனக்கன்பானவர்களே! சிறுவயதில் நாம் கற்றுக்கொடுக்கும் காரியங்களே நம் பிள்ளைகளை கர்த்தருக்குரியவர்களாக உருவாக்கும். வேதத்தில் உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் எனப் பார்க்கிறோம். எனவே நாம் பிள்ளைகளை கர்த்தரின் துணையோடு கர்த்தருக்கென்று வேத வசனத்தின் வழியிலே நடத்துவோம். நம் பிள்ளைகளும் வானிலுள்ள நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கிறவர்களாய், அநேகருக்கு பயனுள்ளவர்களாய் இருப்பார்கள்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு
கண்மணியே கேள் நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் வாலிபர்கள் பரிசுத்தத்தில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864