இன்றைய தியானம்(Tamil) 15.07.2024
இன்றைய தியானம்(Tamil) 15.07.2024
கண்ணீர்
"இயேசு கண்ணீர் விட்டார்" - யோவான் 11: 35
ஒரு முறை சுவிசேஷகர் பில்லி கிரஹாம் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செய்தி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்திருந்தார்கள். ஆனால் அவர் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. "காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லி கிரஹாம் வருகிறார்" என்றெல்லாம் மீடியா, பத்திரிகை அவரை கிண்டல் செய்து சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றிவிட்டீர்களா? என்றெல்லாம் ஆளாளுக்கு பலவிதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் செய்தார்கள். துறைமுகத்திலிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பட்டணத்திற்கு இரயில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறது, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன் என்று தேவனுடைய முகத்தை நோக்கிப்பார்த்தார். உடனே தேவன் வேதவசனத்தின் மூலம் அவரோடு பேசினார். உடனே அவர் ஆண்டவரே எந்தவிதமான போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக்கொள்ளக்கூடிய கிருபையை தாரும் என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா? என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதைக் கண்ட பில்லிகிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
இன்றைய வேதபகுதியிலும் கூட தன் சகோதரன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அழுதுகொண்டு நின்ற லாசருவின் சகோதரிகளை இயேசுவானவர் காண்கிறார். நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்கிற மார்த்தாளின் சத்தத்தைக் கேட்கிறார். மரியாளின் கண்ணீர் அவரை அசைக்கிறது. அவரையும் கண்ணீர் சிந்த வைக்கிறது. உங்கள் சகோதரனுக்காக தானே அழுகிறீர்கள்? லாசருவே வெளியே வா என்று சொல்லி, மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை உயிரோடு எழுப்பி சகோதரிகளிடத்தில் ஒப்படைக்கிறார்.
பிரியமானவர்களே! ஆண்டவருடைய சமூகத்தில் நாம் எதற்காக கண்ணீர் வடிக்கின்றோமோ அது அவரை அசைக்கக்கூடியது. அந்த கண்ணீர் மிகவும் விலையேறப்பெற்றது. இவ்வுலகில் பலரை வேதனைப்படுத்தி கண்ணீர் சிந்தவைத்து அதைக்கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி விட்டு போகிற மனித நேயமற்ற மனிதர்களை பார்க்கிறோம். ஆனால் நம் ஆண்டவர் அப்படி அல்ல. நீங்கள் எதை, யாரை இழந்து தவிக்கிறீர்கள்? உங்கள் கண்ணீரை காண்பவர் யாருமில்லை, உதவிசெய்வார் யாருமில்லை என்று அங்கலாய்க்கிறீர்களோ? உங்கள் கண்ணீர் அவரை அசைக்கும். அழாதீர்கள், மறுஉத்தரவு கொடுப்பார், பதில் செய்வார். ஆமென்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864