இன்றைய தியானம்(Tamil) 07-07-2022
இன்றைய தியானம்(Tamil) 07-07-2022
சமாதானம்
“என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” - ஏசாயா 32:18
போதகர் எச்.பி. மக்கார்ட்டினி, ஹட்சன் டெய்லரை சீனாவில் சந்தித்த போது அவர் பலவித பாரங்களுக்கு நடுவிலும், அமைதியாக இருப்பதைக் கண்டு வியந்து போனார். “நீங்கள் இலட்சக்கணக்கானோருடன் தகவல் தொடர்பில் ஈடுபடுகிறீர்கள்; நானோ சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறேன், உங்கள் கடிதங்கள் மிக முக்கியமானவைகள், என்னுடையவைகளோ அவைகளோடு ஒப்பிடத்தக்க அளவில் சாதாரணமானவைகள். ஆனால் நான் கவலைப்பட்டு மிகவும் கலங்கி நிற்கிறேன். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே எப்படி?” என்று கேட்டே விட்டார். டெய்லர் பதிலுக்கு, “என் மனதையும் சிந்தையையும் புத்திக்கெட்டாத சமாதானம் நிறைக்காவிட்டால் என்னால் இந்த வேலைகளைச் செய்து முடிக்க இயலாது” என்று கூறினார். அவர் கர்த்தரோடு எந்நேரமும் இருந்தார். இதுதான் யோவான் 15-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள உண்மையான நிலைத்திருத்தல் ஆகும் என மக்கார்ட்டினி எழுதுகிறார்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருப்பார்கள்” என்று சொல்லியிருப்பதை வாசிக்கிறோம். மேலும் ஏசாயா 26:3 –ல் வாசிக்கும்போது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்” என்றும் வாசிக்கிறோம். தேவனுடைய ஜனங்களுக்கு சமாதானம் என்பது நாம் சார்ந்திருக்கும் இடங்களைப் பொறுத்ததல்ல. மாறாக ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உறவைப் பொறுத்தே காணப்படுகின்றது. சமாதானத்தைப் பற்றி வேதாகமத்தில் அநேக வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் பேசியுள்ளார். கர்த்தருக்குள் நாம் இருக்கிறோம் என்பதை எதை வைத்து நிதானிக்க முடியும். நீங்கள் கவலைப்படும் சூழல் வரும்போது ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் தேவனைத் தேடும் பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் சிந்தைகளையும், இருதயங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நம்மைக் காத்துக் கொள்கிறது. சங்கீதத்தில் தாவீது கூறும்பொழுது, “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை” என்று சொல்கிறார். சமாதானமாக வாழ விரும்புகிறவர்கள் சமாதானத்தைத் தேடி வேறு எங்கும் ஓட வேண்டியதில்லை. அது கிறிஸ்துவுக்குள் காணப்படுகிறது. நீங்கள் அமைதியாக வாழும்படி இயேசுவைத் தேடி வாருங்கள். உலகம் கொடுக்கக் கூடாத மெய்யான சமாதானத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
உலகத்தைக் கலக்குகிறதான 120 புதிய மிஷனெரிகளை தேவன் நம்மோடு இணைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250