Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12.04.2024

இன்றைய தியானம்(Tamil) 12.04.2024

 

தகுந்த ஆடை

 

"…இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்" - ஏசாயா 61:10

 

தொடர்ச்சியான பலத்த மழைக்குப் பின் பள்ளி திறந்தது. மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். சிலர் வருகை புரியவில்லை. வந்த மாணவ, மாணவியரில் சிலர் சீருடை அணியாமல் கலர் உடைகளை அணிந்து வந்திருந்தனர். பள்ளியில் மணி ஒலிக்க வேகமாக மூன்று மாணவர்கள் ஓடி வந்தனர். மிகச் சரியான சீருடையில் வந்த அவர்களைப் பார்த்த ஆசிரியருக்கு ஒரே வியப்பு! சீருடையில் வராதவர் "நனைஞ்சிடுச்சி சார்", "அழுக்கா இருக்கு சார்", "காயவில்லை சார்", என்று பல காரணங்கள் கூறியிருந்தனர். இந்த மூன்று பேரும் வாழிடம் இல்லாமல் பனைமரத்தடியில் கூட்டமாய் வசித்து வரும் சமூகம். சாட்டையடித்து, பிச்சையெடுத்து, சிறு விலங்குகளை வேட்டையாடி பிழைக்கும் மக்கள் ஆவர். மாறப்பன், எப்படிடா, யூனிபார்மை பத்திரமா வச்சிருந்தீங்க? "ஸ்கூல் துணியை மட்டும் நாங்க மூட்டை கட்டி பக்கத்தில் இருக்கிற பில்டிங்கில் ஒரு மூலையில் பத்திரமா வச்சிட்டோம் டீச்சர்." சொல்லும் போதே அந்த மாணவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! தலைமை ஆசிரியர் அவர்கள் பொறுப்புணர்வைப் பாராட்டினார்.  

 

அன்புக்குரியவர்களே! பாருங்கள், இந்த மாணவர்கள் தங்கள் சீருடையைக் காத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தது போலவே நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நமது பரமபிதா நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதுவே. நாம் நமது இரட்சிப்பின் வஸ்திரத்தை பாதுகாத்தவர்களாய் பரலோக இராஜ்ஜியத்திற்குச் சென்றடைய வேண்டும். ஒரு ராஜா வீட்டு கல்யாணத்தில் விருந்தாளியைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது கல்யாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனைக் கண்டு, சிநேகிதனே "நீ கல்யாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்"? என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான்" பாருங்கள் இடத்திற்கேற்றார் போல உரிய வஸ்திரம் அணியும் போது மட்டுமே நாம் அந்த இடத்தில் இருக்க தகுதி பெறுகிறோம். அப்படியானால் பரலோக இராஜ்ஜியத்தில் இயேசுவோடு மகிழ்ந்திருக்க, அவர் இரத்தம் மட்டுமே பாவத்தைப் போக்கும் என்று விசுவாசித்து, இயேசு எனக்காக தம்முடைய ஜீவனை அளித்தார் என்ற உறுதியோடு பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடும்போது நாம் இரட்சிப்படைந்தவர் என்ற தகுதியோடு இரட்சிப்பின் வஸ்திரந்தரிக்கப்பட்டவர்களாய் மாறுகிறோம். தொடர்ந்து இரட்சிப்பைக் காத்துக் கொண்டு வஸ்திரங்களை அசுசிப்படுத்தாமல் காத்துக் கொள்ளும் போது பரலோகத்தில் அவரோடு கூட நடக்கும் பேறு பெற முடியும். பாவமன்னிப்பே, இரட்சிப்பின் வஸ்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் வழி!

 

உங்கள் இரட்சிப்பின வஸ்திரங்களை காத்துக் கொள்ளும்படியாக மீண்டும் பாவச்சேற்றில் விழாதபடி கவனமாக இருப்பீர்களா? மற்றவர்க்கும் இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பைக் குறித்து எப்படியாவது வழிகாட்ட முயற்சிப்பீர்களா?

- Mrs. எமீமா சௌந்தரராஜன்

 

ஜெபக்குறிப்பு:

பணித்தளங்களில் நடக்கும் வீட்டு ஜெபக் கூட்டங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)