Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 22.07.2024

இன்றைய தியானம்(Tamil) 22.07.2024

 

விசுவாசம்

 

“…நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு" - 1 தீமோ. 1:18

 

ராமுவும் மற்றும் அவனது அம்மாவும் ஆலயத்துக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பெயர் கிறிஸ்தவரான அவனுடைய அப்பா ஆலயத்துக்கு வரமாட்டார். அவரது ஒரே வேலை ஆலயத்துக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்துச் செல்வது மட்டுமே ஆகும். அன்றும் அதேபோல் இருவரையும் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது போதகர் கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால் மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்றாலும் அது அப்படியே ஆகும் என்று கூறியது காதில் விழுந்தது. அப்புறம் வீட்டிற்குச் சென்றார். இரவில் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்தார். இதைக்கண்ட ராமுவுக்கும், அம்மாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரது வேண்டுதல் என்னவென்றால், தனது தோட்டத்தில் இருக்கும் பெரிய கல் மறைய வேண்டும் என்பதாகும். இரவு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் அவர் ஓடிச்சென்று தோட்டத்தைப் பார்த்தார். அந்த பெரிய கல் அங்கேயே இருந்தது. உடனே ராமின் அப்பா இப்படியாகக் கூறினார், "எனக்கு அப்பவே தெரியும் அந்த கல் மறையாதென்று!"

 

வேதத்திலும் ஒரு சம்பவம் இதேபோல் எழுதப்பட்டுள்ளது. ஒரு மனுஷன் தன்னுடைய மகனின் சுகத்திற்காக இயேசுவின் சீஷர்களிடம் வந்தார். இயேசுவின் சீஷர்களால் அந்த மகனுக்கு சுகத்தைக் கொடுக்க முடியவில்லை. அந்த மகனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அதன் பின்பு இயேசு அவனுக்குள் இருந்த பிசாசை அதட்டினார். உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது. அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து ஏன் எங்களால் கூடாமற்போயிற்று என்று கேட்டதற்கு இயேசு உங்கள் அவிசுவாசத்தினாலே தான், கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் போதும் என கூறினார். 

 

பிரியமானவர்களே! விசுவாசம் கடுகு அளவில் சிறியது. ஆனால் முழுமையாக இருக்கக்கூடியது. அதேபோல முழுமையான விசுவாசம் நமக்கும் வேண்டும். இயேசுவின் மீது விசுவாசம் வைத்து ஜெபிக்கும் ஜெபத்திற்கு நிச்சயம் பதில் உண்டு. இயேசுவினிடத்தில் எல்லாவித சுகமும் நன்மைகளும் உண்டு. நாம் தான் விசுவாசத்துடன் நமக்கு தேவையானதை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசம் உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என வேதம் கூறுகிறது. பொன், வெள்ளியைப் பார்க்கிலும் நம்முடைய விசுவாசம் உயர்ந்தது. விசுவாசம் இல்லாதது தேவனுக்கு பிரியமற்றது. ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசம் வர்த்திக்க தேவனிடம் வேண்டிக்கொள்வோம். நாமும் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரைப் பற்றிக்கொண்டு ஜெயம் பெறுவோம். ஆமென்!

- Mrs. திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு: 

நாம் நடத்தும் சிறுவர் முகாம்களில் பங்குபெற்ற சிறுவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)