By Village Missionary Movement
Saturday, 29-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 29.06.2024
சேற்றில் ஓர் நறுமணம்
"…அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" - 2 கொரிந்தியர் 2:14
இமயமலைப் பகுதியின் அருகில் உள்ள கிராமத்திற்கு ஒரு தேவ மனிதன் சென்றார். அங்கு சென்று பார்த்த போது அந்த கிராமம் சேறும் சகதியுமாக இருந்தது. துர்நாற்றம் வீசியது. ஒரே குப்பைமேடாக காட்சியளித்தது. அந்த துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அந்த தேவமனிதர் அந்த கிராமத்தை விட்டு போய்விட்டார். சில வாரங்கள் கழித்து மறுபடியும் அந்த கிராமத்திற்கு வந்தார். துர்நாற்றம் இல்லை, அதற்குப் பதிலாக மிகுந்த நறுமணம் வீசியது. அந்த தேவமனிதர்க்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்னவென்று பார்த்தால் அந்தக் குப்பை மேடெங்கும் ஒருவிதமான பூச்செடிகள் வளர்ந்து பூத்து குலுங்கியிருந்தது. அவ்வூரின் சேறும் சகதியும் அப்படியேதான் இருந்தது, என்றாலும் துர்நாற்றமில்லை. இந்த "வாசனையுள்ள பூக்கள்" அந்த துர்நாற்றத்தை மூடினது. இந்த வாசனையுள்ள பூவைப்பார்த்து அந்த தேவமனிதர் சொன்ன காரியம் என்னவென்றால், "இந்த குப்பை மேட்டிலே ஆண்டவரின் மகிமையைப் பார்க்கிறேன்" என்றார்.
இதைப் போன்று சேறும் சகதியுமான பாவத்தால் நிறைந்த மோவாப் தேசத்தில் இருந்து புறப்பட்ட பெண்தான் "ரூத்". ரூத் என்றால் "சிநேகிதி" என்று அர்த்தமாம். "ரூத் முள்ளில் ரோஜா, சேற்றில் ஓர் தாமரை"! ஏன் தெரியுமா? ரூத் தன் கணவன் இறந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறாள். எங்கும் இருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்தனர் ரூத்தும் அவள் மாமியும். இந்த சூழ்நிலையில் தான் ரூத் இஸ்ரவேலின் தேவனை உறுதியாக பின்பற்றி தன் மாமி நகோமியுடன் பெத்லகேமிற்கு வருகிறாள். அவள் இஸ்ரவேலின் தேவனை உறுதியாகப் பின்பற்றினாள். அவள் தேவன் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையை சூழ்நிலையோ, நகோமியோ, பிசாசோ எவராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் அவளின் உறுதியைக் கண்டு பரலோகம் விசில் அடித்தது. தேவதூதர்கள் ஆடிப்பாடினார்கள், கேரூபினும், சேரபீன்களும் தம்புரு வீணை வாசித்தார்கள். பரிசுத்தவான்கள் கெம்பீரித்தார்கள். ஆம், ரூத்தின் உறுதியை பரலோகம் அங்கிகரித்தது! அதனால் தான் பெத்லேகேமிற்கு வந்த ரூத்துக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவள் வாழ்வு போவாசுடன் மலர்ந்து வாசனை வீசியது. இந்த போவாஸ் ஐசுவரியவான், நற்குணங்களுடையவர், பரிசுத்தவான். இப்படிப்பட்ட போவாசுக்கும் ரூத்திற்கும் திருமணம் நடந்தது. இந்த ரூத்-போவாஸ் சந்ததியில் தான் சரோனின் ரோஜாவாகிய இயேசு கிறிஸ்து தோன்றினார். இவர் உலகத்திற்கு வாசனையாய் இருக்கிறார். இந்த சாரோனின் ரோஜாவின் வாசனை மோவாபிய பெண்ணான ரூத்தின் அருவருப்பை மூடினது. சேறும் சகதியுமான வாழ்வை சாரோனின் ரோஜாவாம் இயேசு தம் மகிமையால் மூடினார். அவள் வாழ்வை வாசனை வீசச் செய்தார்.
இதை வாசிக்கின்ற அருமையானவர்களே, நீங்களும் பாவ வாழ்வில் அசுத்தத்தில் இருக்கின்றீர்களா? நீங்கள் ரூத்தைப் போல இயேசுவை உறுதியாக பின்பற்றும் போது உங்கள் வாழ்வும் மலரும், வாசனை வீசும்!
- Sis. சலோமி
ஜெபக்குறிப்பு:
நமது தோழமை ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864