By Village Missionary Movement
Friday, 28-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 28.06.2024
பலத்த கை
"…ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" - 1 பேதுரு 5:6
ஒருமுறை ஆல்ப்ஸ் மலையை சுற்றிக் காண்பிக்கும்படி ஒரு செல்வந்தனை சுற்றுலா வழிகாட்டி அழைத்துச் சென்றான். ஆல்ப்ஸ் மலையில் ஏறுவதற்கு அந்த செல்வந்தனுக்கு மிகுந்த பயமாகிவிட்டது. ஆனால் அந்த வழிகாட்டி அவ்வப்போது அவனுடைய உறுதி வாய்ந்த கரங்களை நீட்டி கீழே வழுக்கி விழுந்து விடாமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். இன்னும் சற்று உயரமான பகுதியில் ஏறினதும் அந்த செல்வந்தன் தன்னையும் அறியாமல் கீழே நோக்கிப் பார்த்தார். அங்கே கீழே பாதாளம் இருப்பது போல் இருந்தது. கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட தேறாது என்று எண்ணினார். அவர் எப்போது கீழே நோக்கி பார்த்தாரோ அப்பொழுதே மரணபயம் அவரைப் பிடித்துக் கொண்டது. அவர் அந்த வழிகாட்டியைப் பார்த்து இனிமேல் என்னால் முன்னேறி செல்ல முடியாது. நான் விழுந்து விடுவேன் போதும் என்றான். அதற்கு அந்த வழிகாட்டி அவரைப் பார்த்து ஐயா நான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் இந்த ஆல்பஸ் மலையில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மலையை சுற்றிக் காண்பித்திருக்கிறேன். ஆனால் ஒருவர் கூட என் கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததில்லை. என் கரங்களைப் பாருங்கள் என்று காண்பித்தார். அந்த செல்வந்தன் அந்த வழிகாட்டியின் பலத்த கையை நோக்கி பார்த்த போது அவருடைய பயம் எல்லாம் மறைந்து போயிற்று.
ஆபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து, ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆகார் கர்ப்பந்தரித்தாள். இந்நாட்களில் சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் ஆகார் அவளை விட்டு ஓடிப் போனாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய் அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். இந்த வார்த்தைக்குப் பின்புதான் ஆகார் வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொண்டாள்.
இதை வாசிக்கின்ற அன்பானவர்களே, தேவனுடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருக்க நாம் கற்றுக் கொள்வோம். அதுவே நமக்கு ஆசீர்வாதத்தை தரக்கூடியது. தேவனுடைய பலத்த கரம் வழுவாமல் கடைசி வரையிலும் நம்மை வழிநடத்த வல்லமையுள்ளதாய் இருக்கிறது. அவருடைய பலத்த கரத்திலிருந்து உங்களை யாரும் பிரித்துக் கொள்ள முடியாது. அவர்தாமே நம் ஒவ்வொருவரையும் அவருடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். நாம் ஒருநாளும் அவரால் மறக்கப்படுவதில்லை.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864