By Village Missionary Movement
Monday, 19-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 19-04-2021
மேஜிக் ஷோ
“நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே;…” - எரேமியா 45:5
ஒருமுறை ஒரு கிராமத்தில் சிறுவர் ஊழியம் செய்து கொண்டிருந்தோம். “உண்மையாயிரு” என்ற தலைப்பின் கீழ் பாடல், மனப்பாட வசனம் மற்றும் விளையாட்டு எல்லாம் நடத்தினோம். சிறுவர்களும் அருமையாக கவனித்தனர். பின்பு ஒரு சிறிய மேஜிக் ஒன்றை செய்து காண்பித்தோம். மேஜிக் காட்சியை கண்ட அனைத்து சிறுபிள்ளைகளும் கைகளை தட்டினார்கள், சிறுவர் ஊழியமும் முடிந்தது. பிள்ளைகள் கலைந்து சென்ற நேரத்தில் ஒரு சிறுவன் மாத்திரம் தனியாக வந்து “அண்ணா இந்த மேஜிக் எப்படி பண்ணினீர்கள்?” என்று கேட்டான். அதெல்லாம் உனக்கு புரியாது என்று சமாளித்தபோது, அவன் சொன்னான் பொய் பேசக்கூடாது, உண்மையாக வாழ வேண்டும், மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்று இப்போது தானே சொன்னீர்கள். நீங்களே இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்றான். அவன் சொன்ன வார்த்தை பளார் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. அன்று ஒரு தீர்மானம் எடுத்தோம். நம்மை ஒரு பெரிய ஆட்களாக காண்பிக்க வேண்டும், எல்லா பிள்ளைகளையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யும் இந்த மேஜிக் நமக்கு வேண்டாம். தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் சூழ்நிலையில் மேஜிக்கை செய்தால் போதும். ஊழியர்களாகிய நாம் மேஜிக்காரர்களாய் மாறிவிட வேண்டாம். நம் சாட்சி முக்கியம் என்று தீர்மானித்தோம்.
அப்போஸ்தலர் 8:9ம் வசனத்தில் சீமோன் என்ற ஒரு நபர் மாயவித்தைக்காரனாய் இருந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான் என்று வாசிக்கிறோம். இந்த மாயவித்தைக்காரனான சீமோன், பிலிப்பு செய்த அற்புதங்களை தானும் செய்ய வேண்டுமென்று விரும்பினான். பேதுருவினால் ஆவியானவர் ஊற்றப்பட்டு கொண்டிருந்ததை பார்த்த அவன் தனது பணத்தை கொண்டு அவ்வரங்களை வாங்க முயற்சி செய்தான் என்று நாம் வாசிக்கிறோம். பின்பு பேதுரு அவனை கடுமையான வார்த்தைகளால் எச்சரிப்பதைப் பார்க்கிறோம்.
ஆம், பிரியமானவர்களே! தன்னை ஒரு பெரிய ஆளாக காண்பிக்க வேண்டும் என்பது விழுந்துபோன மனிதர்களாகிய நமக்குள் இருக்கும் பிசாசின் எண்ணம். அதனால் எண்ணத்தில் மற்றவர்கள் காண வேண்டும் என்றும் நம்மை பாராட்ட வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டு செயல்படுகின்றோம். இது கர்த்தரின் பார்வைக்கு சரியாக இருக்குமா? என்பதை நாம் சிந்தித்து யோசிக்க வேண்டும். நம் வாழ்வில் தேவன் மாத்திரமே பெரியவராய், உயர்ந்தவராய், கனத்திற்குரியவராய் இருக்கட்டும். பரிசுத்தமே நம் வாழ்வின் நோக்கமாய் மாறட்டும். அல்லேலூயா!
- Y. அனீஸ் ராஜா
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு நாளும் தியானச் செய்தியை WhatsApp, Twitter, E-mail, Facebook மூலம் வாசித்தும், கேட்டும் பயன்பெறும் மக்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250