By Village Missionary Movement
Thursday, 13-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 13.06.2024
தாமதமானாலும் . . .
"…அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" - ஆபகூக் 2:3
இரட்சிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் இரட்சிக்கப்படாத தன் கணவருக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஆனால் அந்த ஜெபத்திற்கு பதில் வந்தபாடில்லை. அவளது கணவரும் இரட்சிக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒருநாள் கார் விபத்தில் அந்தப் பெண் தன் கணவரை பறி கொடுத்தாள். கணவரை இழந்த துக்கம் ஒருபுறம், ஜெபம் கேட்கப்படவில்லையே என்ற ஆதங்கம் மறுபுறம். வேதத்தை மறந்தார், ஜெபத்தை விட்டார், ஆண்டவரை விட்டு தூரம் சென்றார். காலங்கள் உருண்டோடின. ஐந்து வருடங்களுக்குப் பின் நண்பர் ஒருவரை யதார்த்தமாய் வழியில் சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவளிடம் கூறினார். உங்கள் கணவர் விபத்தில் இறந்த அன்று அவரது காரில் லிப்ட்கேட்டு அவருடன் சில மணி நேரங்கள் செல்ல நேர்ந்தது. என் சாட்சியையும், ஆண்டவரின் அன்பையும் எடுத்துரைத்தேன். கவனமாக கேட்டுக் கொண்டார். போகும் வழியிலேயே தன் காரை நிறுத்தி பாவத்தை அறிக்கையிட்டு கண்ணீருடன் ஜெபித்தார். நான் காரிலிருந்து இறங்கும் போது இரட்சிப்பின் சந்தோஷத்தை அவர் முகத்தில் கண்டேன். ஆனால் அன்றே அவர் கார் விபத்தில் ஆண்டவரின் சமூகம் சென்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். இதனை உங்களிடம் சொல்ல இன்றுதான் சமயம் வாய்த்தது என்றார். அந்தப் பெண்மணி அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. மீண்டுமாய் தேவனுடைய அன்பிற்குள் கண்ணீருடன் திரும்பினாள்.
வேதத்திலே ஆபிரகாம் 75வது வயதிலே வாக்குத்தத்தம் செய்த சந்ததியை பெறுவாய் என்று தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டார். முதுமையினால் சாராளின் கர்ப்பம் செத்துப் போனதை ஆபிரகாம் அறிந்திருந்தும் காத்திருந்தார். தன்னுடைய 100வது வயதில் ஈசாக்கைப் பெற்றெடுக்க தேவன் கிருபை செய்தார். அதேப் போல் எலியாவின் ஊழியக்காரன் எலிசாவிற்கு இரட்டிப்பான வரம் கிடைத்தது என்றாலும் 13 அற்புதங்கள் எலிசாவைக் கொண்டு நடந்தது. ஒரு வரம் மீதியாயிருந்தது. எலிசா மரித்தும் போனார். ஆனால் எலிசாவின் கல்லறையில், மரித்த வாலிபனை (2இராஜாக்கள் 13:21) வைத்தவுடன் உயிரோடு எழுந்தான். தேவனுடைய ஆசீர்வாதங்கள் தாமதித்தாலும் நிறைவேறும்.
எனக்கன்பானவர்களே, பல நாட்களாய் ஜெபித்து வருகிறேன். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறின பாடில்லையே என்று கலங்குபவரா நீங்கள்? தேவன் உங்களைக் குறித்த திட்டம் மாறாது. ஏற்ற நேரத்தில் உங்கள் கண்களும் காதுகளும் கேட்கும், உங்கள் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும். சோர்ந்து போகாதிருங்கள். அற்புதங்களைக் காண்பீர்கள். அல்லேலூயா!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
வடமாநிலங்களில் பணிசெய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864