By Village Missionary Movement
Thursday, 30-May-2024இன்றைய தியானம்(Tamil) 30.05.2024
பரம்பரை சொத்தை விட்டுச்செல்லுங்கள்
"…மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், ...வந்தார் என்றார்" - மத்தேயு 20:28
ஒரு பெரிய அதிகாரி திடீரென்று மரித்துப் போனார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், சக ஊழியர்களுக்கும் பேரிழப்பை கொடுத்தது. அவரது அடக்க ஆராதனை நண்பர்களாலும், குடும்பத்தினராலும் நிரம்பி வழிந்தது. காரணம் அவருக்கே உரிய தனித்தன்மையினால் அநேகருடைய வாழ்க்கையைத் தொட்டிருந்தார். அவருடைய அன்பு, நகைச்சுவைப்பட பேசும் தன்மை, எளியவர்களிடம் காட்டும் ஆர்வம் போன்றவற்றை மக்களால் மறக்க முடியவில்லை. முல்லர் என்ற தேவமனிதர் இவ்வாறாகக் கூறினார், "ஒரு மனிதனை புதைக்கலாம். ஆனால் அவரது குணநலன்களை புதைக்க முடியாது என்று. ஆம், நல்ல குணநலனை பரம்பரை சொத்தாக விட்டுச் செல்ல முடியும்.
வேதத்திலே 2நாளாகமம் 21ம் அதிகாரத்தில் யோராம் என்ற ராஜாவின் "குறுகிய கால ஆட்சி" விவரிக்கப்பட்டுள்ளது. அவர் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தன் சகோதரர் எல்லோரையும் கொன்று போட்டார். மக்களை விக்கிரக வணக்கத்திற்கு வழி நடத்திச் சென்றார். தீர்க்கதரிசி எலியா, அவரது பொல்லாத நடவடிக்கைகளைப் பற்றி எழுதியதான ஒரு நிரூபம் அவனிடத்தில் வந்தது. ஆனாலும் மனந்திரும்பாமல் "விரும்புவாரில்லாமல் யோராம் ராஜா இறந்து போனான்" என்று வேதம் சொல்கிறது. தனது பதவியும் அதிகாரமும் பரம்பரை பரம்பரையாகத் தனக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று எண்ணினார். ஆனால் யோராம் ராஜா ஒரு பொல்லாத மனிதன் என்றும், சுயநலமிக்கவன் என்றும் வேதம் பரம்பரை பரம்பரையாக நினைவு கூருகிறது.
கர்த்தருக்கு பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்து ராஜாவாக இருந்தாலும் அவர் இவ்வுலகிற்கு ஓர் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யும்படி வந்தார். அவர் நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்த பொழுது அதிகாரத்தைப் பிடித்திருந்தவர்களின் வெறுப்பை சந்தித்தார். அவரோ ஆளுகை செய்து, அதிகாரம் செலுத்தி தன் பெயரை உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்று வரவில்லை, நமக்காக ஜீவனைக் கொடுக்கவே வந்தார். எனவே இன்றும் இயேசுகிறிஸ்து நமக்கு மாபெரும் ஆஸ்தியாக விளங்குகிறார்.
அன்பானவர்களே! நாமும் "நமது வாழ்க்கை நமக்கானது அல்ல" என்று புரிந்து வாழும் போது நம்மிடம் வரும் அனைவரையும் இயேசுகிறிஸ்து போல அணைத்துக் கொள்வோம். கிறிஸ்தவ குணநலன்களோடு வாழுவோம், இவ்வாறாக தேவனுக்காக வாழ்ந்து பரம்பரை சொத்தை விட்டுச் செல்வோம்! அல்லேலூயா!
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864