By Village Missionary Movement
Wednesday, 29-May-2024இன்றைய தியானம்(Tamil) 29.05.2024
நாம் சும்மாயிருப்பானேன்
"…உம்முடைய கற்பனைகளைக் கற்றுக் கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்" - சங்கீதம் 119:73
நீங்கள் ஒரு மிகப்பெரிய வீட்டின் எஜமான் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குக் கீழ் அநேக வேலைக்காரர்கள் இருக்கிறார்களென்றும் வைத்துக் கொள்வோம். நீங்கள் குறிப்பிட்ட காரணத்திற்காக வெளிதேசம் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே உங்கள் வேலைக்காரர்களுக்கு அவரவர் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்டிப்புடனும், கட்டளையாகவும் சொல்லிவிட்டு பிரயாணப்பட்டீர்கள். ஆனால் உங்கள் வேலைக்காரரில் பலர் நீங்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் சொன்ன வேலையைச் செய்யாமல் தங்கள் இஷ்டத்திற்கு சுகபோகமாக வாழந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் தங்களுக்குக் கொடுத்த வேலைகளை உண்மையாகச் செய்து கொண்டிருந்தனர். இந்த சம்பவங்களையெல்லாம் கேள்விப்பட்டு நீங்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுகிறீர்கள். இவர்களைக் குறித்து இப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
இன்றைய வேதபகுதியில் எஜமான் தன் ஊழியர்களுக்கு அவனவன் திறமைக்குத்தக்கதாக ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து என கொடுத்துவிட்டு பிரயாணம் போனான். ஒரு தாலந்து வாங்கியவன் அதைத் தோண்டி மண்ணுக்குள் புதைத்து சோம்பலாக சும்மாயிருந்து விட்டான். மற்ற இருவரும் அதைப் பெருக்கினர். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் எஜமான் வந்து கேட்கும் போது முதல் இருவரையும் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்றார். ஆனால் ஒரு தாலந்து வாங்கி அதைப் புதைத்து சோம்பலாய் சும்மாயிருந்தவனை அழுகையும், பற்கடிப்புமுள்ள இடத்தில் போட்டு விட்டார்.
அன்பான தேவஜனமே! ஆண்டவர் நம்மைப் படைத்ததற்கான நோக்கம் அவருடைய சித்தத்தை செய்து முடிப்பதற்காகவே! ஆண்டவர் படைத்த அனைத்து படைப்புகளும் அவருடைய சித்தத்தைச் சரியாய் செய்கின்றது. பெரும்பாலான மனிதர்களைத் தவிர. ஆனால் அவருடைய சித்தத்தை அறிந்தும் செய்யாமல் சும்மாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கக் கூடும் என்கிற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான எல்லா அடையாளங்களும் ஏறக்குறைய நிறைவேறிவிட்டன. வருகை மாத்திரமே தாமதித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தாமதம்? ஒருவரும் கெட்டுப் போகாமல் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் விரும்புவதால் தானே. அப்படியானால் இவைகளெல்லாம் அறிந்த கிறிஸ்தவ ஜனமே நாம் உணர்வடைவோம். ஏனென்றால் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையையே அறியாமல் இருக்கின்ற அநேக ஜனங்களுக்கு மத்தியில்தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மற்நது விட்டோமோ? இயேசுகிறிஸ்து கடைசியாகக் கொடுத்த கட்டளை நம் நினைவில் வருவதுண்டா? இயேசுகிறிஸ்துவின் வருகையில் நாம் அவரிடம் என்ன பதில் சொல்லுவோம்? இனிமேலும் நாம் சும்மாயிருப்பானேன்! புறப்பட்டுபோவோம். சுவிசேஷத்தை அனைவருக்கும் அறிவிப்போம். அநேகரை அவருடைய சீஷராக்குவோம். ஆமென்.
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள அமைதி இல்லம் என்னும் ஊழியத்திட்டத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864