By Village Missionary Movement
Tuesday, 28-May-2024இன்றைய தியானம்(Tamil) 28.05.2024
கண் திறக்கப்பட்டவன்
"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" - சங்கீதம் 121:1
ஒரு குருடன் வயிற்று பிழைப்புக்காக ஒரு புதிய ஊருக்கு வந்து பல வீடுகளுக்கு முன்பு கத்தியும் பிச்சை கிடைக்கவில்லை. பசி காதை அடைத்தது. தன் கோலால் தட்டு தடுமாறி ஒரு பெரிய வீட்டில் பத்துபடிகளில் ஏறி ஒரு பெரிய தூணையும் தடவி "இவர்கள் பணக்காரர்கள் நிச்சயம் தனக்கு உணவளிப்பார்கள்" என்று "அம்மா, தாயே தர்மம் செய்யுங்கள்" என்று கத்தினான். அது உண்மையில் பாழடைந்த பங்களா. இந்த குருடன் மிகுந்த பசியோடு கத்துவதை கவனித்த அருகில் வசித்த பெரியவர் ஒருவர் "ஐயோ பாவம் இந்த வாலிப குருடன், என் மகனைப் போல் இருக்கிறானே" என்று பாவப்பட்டு நல்ல சூடான உணவு கொண்டு வந்து அவனுக்கு கொடுத்தார். அன்று முதல் அவன் தினமும் மதியம் அதே பெரிய வீட்டுக்கு வந்து படியேறி பிச்சை கேட்பதும், பெரியவர் அவனுக்கு உணவளிப்பதும் வழக்கமாயிற்று.
பின்பு ஒரு நாள் பெரியவர் பக்கத்து டவுனில் உள்ள இலவச கண் சிகிச்சை முகாமில் இந்த வாலிபனை சேர்த்தார். சிகிச்சை முடிந்து ஆச்சரியமாக அவனுக்கு பார்வை கிடைத்தது. கண் கட்டு அவிழ்க்கும் நாளில் தனக்கு பார்வை வர உதவி செய்த பெரியவரை தான் காண வேண்டும் என விரும்பினான். ஆனால் அவர் வரவில்லை. அவரைத் தேடி அவருடைய ஊருக்கு சென்றான். வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பழையபடியே கண்களை மூடிக் கொண்டு தடியெடுத்து தட்டி பத்து படிகளுள்ள வீட்டை கண்டுபிடித்து கண்களைத் திறந்து பார்த்தால் அது பாழடைந்த பங்களா என்று கண்டு அதிர்ச்சியடைந்தான். யார் தனக்கு உணவளித்து பார்வை கிடைக்க உதவியிருப்பார் என்று கண்டுபிடிக்க பழையபடியே சத்தமாய் பிச்சை கேட்டான். அவன் குரலைக் கேட்ட பெரியவர் ஓடிவந்து அவன் பார்வையடைந்தவனாய் வந்ததைக் கண்டு கட்டிப்பிடித்துக் கொண்டார். "இனி நீ பிச்சையெடுக்கக் கூடாது, நீ என் மகனாய் இரு" என்று தன் வீட்டில் ஏற்றுக் கொண்டார்.
இந்தக் கதையில் வருவது போல் இன்றும் நம்மில் பலர் குருடான பிச்சைக்காரனைப் போல் பலரையும் நம்பி பல இடங்களில் நன்மையைத் தேடி அலைந்தாலும், இரக்கமுள்ள தகப்பன், நம் அறியாமையை எண்ணி நம்மை அலட்சியப்படுத்தாமல் நமக்கு வேண்டிய நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். வேதத்தின் மூலமாக நம் கண் திறக்கப்படும் போது நாம் நம்பின இடத்தில் இருந்து நன்மைகள் வரவில்லை. கர்த்தரே இதுவரை நம்மை போஷித்திருக்கிறார். அவர்தான் நம்முடைய உண்மையான தகப்பன் இனி நாம் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவை புரிந்து கொள்கிறோம். எல்லா நன்மைகளுக்கும் மூல காரணர் கர்த்தர் ஒருவரே! பிச்சைக்காரர்களை போல் அழைந்த நம்மை உரிமையுள்ள கர்த்தரின் பிள்ளைகளாக்குகிறார்.
ஆம், நாமும் அனுதினமும் வேதத்தை வாசித்து, சகல நன்மைகளுக்கும் மூலகாரணராகிய இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாய் வாழ பிரயாசப்படுவோம். ஆமென்!
- Sis. எல்சி
ஜெபக்குறிப்பு :
நமது மீடியா ஊழியங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864