By Village Missionary Movement
Friday, 24-May-2024இன்றைய தியானம்(Tamil) 24.05.2024
மணவாளனின் நேசம்
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" - யோவான் 3:16
ஒரு ஊரில் ராணி என்ற வாலிபபெண் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். ராணி ஒரு வாலிபனை விரும்பினாள், மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தனர். ஆனால் இருகுடும்பத்திலும் கடுமையான எதிர்ப்பு. ராணிக்கோ தன்னைத் திருமணம் செய்யப் போகிற அந்த மனிதர் தனக்காக எவ்வளவு தியாகமுள்ளவர் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்பினாள். ராணி அவரை அழைத்து, நீங்கள் என்னை உண்மையாய் நேசித்தால் ஒன்று செய்ய வேண்டும். நாளை காலை நம் ஊரின் எல்லைப்பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்று இருவரும் ஒன்றாக கீழே குதிக்கலாம் என்றாள். அவனும் சரி நான் உன்னை நேசிக்கிறேன் என்னை நம்பு என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக அவளிடம் ஒப்புக் கொண்டான். மறுநாள் காலையில் ராணி சொன்ன நேரத்திற்கு சென்றாள். அங்கு அவன் வரவில்லை. மணிக்கணக்காக காத்திருந்தாள். அவனது தொலைபேசியும் ஆஃப் ஆகி இருந்தது. ராணி உண்மையை உணர்ந்து கொண்டாள். இவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று. நான் மிகவும் நேசித்தவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று மிகவும் அழுதாள்.
அவ்வழியே ஒரு மனிதர் வந்தார். அவளிடம் ஏன் அழுகிறாய் மகளே என்றார். அவள் நடந்த எல்லாவற்றையும் சொல்லி அழுதாள். அவரும் சரி மகளே அழாதே! எனக்கு ஒருவரைத் தெரியும். அவர் உனக்கு நிம்மதியைத் தருவார் என்றார். யார் அவர் என்றாள் ராணி. நீ விரும்பின நபர் வேண்டுமானால் உன்னை ஏமாற்றலாம். ஆனால் இந்த பரம மணவாளனோ உன்னை எப்போதும் கைவிடாமல் சேர்த்துக் கொள்வார். அவர் உனக்காக மரணம் என்னும் குழியிலே குதித்து பெரிய தியாகம் செய்துவிட்டார். அவர்தான் இயேசு, அவர் அன்பு மட்டும் தான் மாறாதது என்றார். தனக்காக தியாகம் செய்தவர் யாரென்பதை அறிந்து கொண்டாள். வெறுமையாயிருந்த அவளது உள்ளத்தை இயேசுவின் அன்பு நிரப்பியது.
இன்றைக்கும் மனிதர்களின் அன்பு மாறக்கூடியதாய் இருக்கிறது. நாம் சிலரை அளவுக்கு அதிகமாக நேசித்து, நம்பி இறுதியில் அவர்களது அன்பு ஏமாற்றம் தரக்கூடியதாயிருக்கும் போது, அழுது புலம்புகிறோம், தனித்து விடப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவின் அன்பைத் தவிர மற்ற அன்பெல்லாம் வரைமுறைக்குட்பட்டதுதான். இதனை வாசிக்கும் அன்பானவர்களே, என்வறுமையில், என் வியாதியில், என் கஷ்டத்தில் என நிந்தையில் அவமானத்தில் என்னுடன் யாருமில்லையே எனக்காக இவைகளை சகிக்க யாருமில்லையே என கலங்குகிறீர்களோ? எல்லாவற்றின் மத்தியிலும் உங்களை உயிர்ப்பித்து, அவைகளிலிருந்து மீட்டு இரட்சிக்க தம் வலது கரத்தை நீட்டியபடி யாவையும் செய்து முடித்த கர்த்தர் இருக்கிறார். கலங்காதீர்கள்!! அவரது அன்பை ருசித்து, வாழ்வின் இறுதிவரை ஏமாற்றமின்றி வாழ்வோம்.
- Mrs. நித்யா நித்யானந்த்
ஜெபக்குறிப்பு:
நமது வட இந்திய மிஷனெரி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864