By Village Missionary Movement
Thursday, 23-May-2024இன்றைய தியானம்(Tamil) 23.05.2024
பிரயாசத்திற்கான பலன் உண்டு
"…இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்" - ரூத் 2:12
தன் இரதத்தில் ஒரு ராஜா காட்டுவழியே பிரயாணம் செய்தார். அவ்வழியே இரண்டு குதிரைகளைக் கண்டார். சில நாட்களில் ராஜாவின் வேலைக்காரர் அக்குதிரைகளை அரண்மனைக்கு கொண்டு சென்று பயிற்சி கொடுத்தனர். பயிற்சி கடினமாக இருந்ததால் சகிக்க முடியாமல் தப்பி காட்டிற்குள் ஓடின. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காடு வறண்டது. மழையில்லாமல் காட்டிலுள்ள புற்களெல்லாம் காய்ந்தன. உணவு கிடைக்காமல் உடல் மெலிந்தன குதிரைகள். அரண்மனையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்திருந்தால் நல்ல உணவு கிடைத்திருக்கும் என எண்ணி வருந்தின.
வேதத்திலே கிறிஸ்துவுக்காக தங்களை பாடுபடுவதற்காக ஒப்புக்கொடுத்தவர்களுடைய முடிவு ஆசீர்வாதமாகவும் அற்புதமாகவும் இருந்ததைக் காண முடிகிறது. சாத்ராக, மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அறிவு, ஞானம், நல் உடலமைப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் தேவனை மட்டும் பணிந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்து வாழ எண்ணினர். இதற்கு அக்கினி சூளை போன்ற கஷ்டங்கள் வந்தது. ஆயினும் தேவனுக்காக வைராக்கியமாய் நின்றனர். தப்புவிக்க வல்லவர், தப்புவியாமல் போனாலும் பரவாயில்லை என துணிந்து நின்றனர். அதின் பலனாய் அந்த ராஜ்ஜியத்தில் ராஜா முதல் அனைத்து மக்களும் தேவனை அறிந்து கொண்டனர். இவர்கள் அக்கினி சூளையைப் பார்த்து பயந்து பின்வாங்கியிருந்தால் அந்த ராஜ்ஜியம் கர்த்தரை அறிந்திருக்காது. உபத்திரவம் மற்றும் சோதனைகளைக் கண்டு பின்வாங்காது கர்த்தருக்காய் உறுதியாய் நிற்பவர்கள் இன்று தேவை. இயேசுகிறிஸ்து " உலகத்திலே உபத்திரவம் உண்டு. ஆனாலும், திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" என்கிறார். உலகத்தை ஜெயித்த கிறிஸ்து ஜெயிக்க வேண்டிய பெலனை தம் பிள்ளைகளாகிய நமக்குள் வைத்திருக்கிறார். ஆதலால் நம்மாலும் அவைகளை ஜெயிக்க முடியும் என தைரியப்படுத்துகிறார்.
இதை வாசிக்கும் தேவபிள்ளைகளே, இவ்வுலக வாழ்வில் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் சகிக்க, பாடுபட ஆயத்தமானவர்கள் நட்சத்திரங்களாய் பிரகாசித்து வருகிறார்கள். அநேக மிஷனெரிகள் கிறிஸ்துவுக்காக உபத்திரவத்திலும் உறுதியாய் நின்றதினால் சுவிசேஷம் நமக்கு அறிவிக்கப்பட்டது. ஆம், பிரயாசங்களுக்கான பலன் இம்மையிலும், மறுமையிலும் உண்டு. ஆதலால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் சகித்து, அவருடைய இராஜ்யத்திற்காகப் பிரயாசப்படுவோம், பலனைப் பெற்றுக் கொள்வோம்.
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:
நமது மோட்சப்பயண மாத இதழை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864