By Village Missionary Movement
Monday, 20-May-2024இன்றைய தியானம்(Tamil) 20.05.2024
பிதாவின் சித்தம்
"…உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது…" - லூக்கா 22:42
பதினான்கு வயது நிரம்பிய ஐடா ஸ்கடரின் கனவுகளும், இலட்சியங்களும் அமெரிக்காவில் வாழ்வது தான். தன்னுடைய பெற்றோரைப் போல இந்தியாவிற்கு மிஷனெரியாக வந்து வேதனைப்படவும், கஷ்டப்படவும் அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. ஒரு விடுமுறைக்காக இந்தியா வந்த போது அவரது கண்முன் நடந்த மூன்று இளம் பெண்களின் மரணம் அவளை வெகுவாக பாதித்தது. குறிப்பாக பெண் மருத்துவர் இல்லாததால் தங்களுடைய பிரசவத்தில் இறந்த அந்த பெண்களின் மரணமே ஐடாவை மருத்துவப் படிப்பிற்கு தூண்டியது. அறியாமையினால் அழிந்து போகின்ற இந்திய பெண்களை காப்பாற்றுவதே தன்னைக் குறித்து தேவனுடைய சித்தம் என்று அறிந்து கொண்டாள். உடனே ஐடா இந்தியாவில் மருத்துவ மிஷனெரியாக பணியாற்றுவதற்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இன்றும் அநேகர் வேலூர் C.M.C. மருத்துவமனையின் மூலமாக பயன்பெறுகின்றனர். இதற்கு காரணம் ஐடா தேவசித்தத்தை அறிந்து செயல்பட்டதுதான்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன் ஜெபித்த ஜெபம், "பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது." (லூக்கா 12:42) இயேசுகிறிஸ்து உலகத்தில் அழிந்து கொண்டிருக்கிற மனிதர்களை மீட்கும்படியாக பிதாவின் சித்தம் செய்ய பரலோகத்தை விட்டு இறங்கி தன்னையே ஜீவபலியாக ஒப்புக் கொடுத்தார்.
பிரியமானவர்களே! பிதாவின் சித்தத்தை சிலுவையில் இயேசு வெற்றியாய் செய்து முடித்தார். இயேசுவானவர் தன்னுடைய சுயத்திற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் பிதாவையே சார்ந்து இருந்தார். பிதாவின் சித்தத்திற்கு மாறாக எதையும் செய்யவில்லை. இயேசுவின் தாயாகிய மரியாளும் தேவதூதனின் வார்த்தைக்கு மறுமொழியாக, இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்று ஆண்டவரின் சித்தத்திற்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்தார். நாமும் சுய விருப்பத்திற்கு இடம் கொடாமல், நம்மை உண்டாக்கின கர்த்தரின் சித்தமறிந்து செயல்பட முயற்சிப்போமா? தேவ சித்தத்திற்கு தன்னையே அர்ப்பணித்தவர்களை மட்டும் தான் தேவன் தம்முடைய மாபெரும் மீட்பின் திட்டத்திற்குப் பயன்படுத்துவார். இன்றிலிருந்து தேவசித்தத்தை அறிந்து செயல்படுவீர்களா?
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
இன்று நடைபெறும் நம்முடைய மிஷனெரிகள் குணசீலன்-ரூத் திருமணத்தை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864