By Village Missionary Movement
Friday, 17-May-2024இன்றைய தியானம்(Tamil) 17.05.2024
பெரியோருக்கான சிறுகதை
"…எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்" - 2 தீமோத்தேயு 2:21
ஒரு மனிதன் தன் வீட்டில் மூன்று பொருட்களை வைத்திருந்தான். ஒன்று கோடாரி, இரண்டு கத்தி, மூன்று பிளேடு. ஒருநாள் காலையில் அந்த மனிதன் மரம் வெட்டுவதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது இந்த மூன்று பொருட்களும் பேசுகின்றன. கோடாரி சொன்னது, "இப்போது எஜமான் என்னைத்தான் கொண்டு போவார்" என்றது. அதே போல கத்தியும் பிளேடும் "இல்லை, இல்லை என்னைத்தான் கொண்டு போவார்" என்று சொன்னதாம். அந்த மனிதன் கோடாரியை எடுத்துக் கொண்டு போனான். மரம் வெட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டான். கோடாரி தன்னைப் பற்றி பெருமையாக நினைத்து மற்ற இருவரையும் அற்பமாக நினைத்ததாம். கொஞ்ச நேரத்தில் அந்த மனிதன் பழங்களை சாப்பிடுவதற்காக அவைகளை எடுத்துக் கழுவிக் கொண்டிருந்தான். அப்போது அந்த மூன்று பொருட்களும் என்னைத்தான் பயன்படுத்துவார் என்று போட்டி போட்டதாம். ஆனால் அவர் கத்தியை எடுத்து பழங்களை வெட்டி சாப்பிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அவர் சேவிங் செய்ய ஆயத்தமானார். அப்போதும் மூன்றும் போட்டி போட்டுக் கொண்டன. அவரோ பிளேடை எடுத்தார் சேவிங் செய்து முடித்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கோடாரியை வைத்து பழம் வெட்ட முடியுமா? கத்தியை வைத்து சேவிங் செய்ய முடியுமா? பிளேடால் மரத்தை வெட்ட முடியுமா? அதாவது மூன்று பொருட்களின் வேலையில் எந்த குறையும் இல்லை. பயன்படுத்தின எஜமானிடத்திலும் ஒரு தவறுமில்லை. ஆனால் மூன்று பொருட்களும் தங்களையும் தங்களது வேலைகளையும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்ததுதான் தவறு!
அப்.பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது இதுபோன்ற காரியத்தை எழுதுகின்றார். ஒரு வீட்டிலே பொன்னும், வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டும் இருக்காது. மரமும், மண்ணுமான பாத்திரங்களும் உண்டு ஒவ்வொன்றும் அதற்கேற்றபடி பயன்படுத்தப்படும். ஆம், அவைகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
இதை வாசிக்கும் நண்பர்களே! உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அநேக நேரங்களில் நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்முடைய நன்மைகளை இழந்து போய்விடுகிறோம். இங்குதான் நாம் தவறுகிறோம். தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷ திறமைகளை வைத்திருக்கிறார். "வேலை செய்யுங்கள், ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்". நீங்கள் நன்மை செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஒப்பிட்டு சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் நீங்களாகவே தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தால் அவர் உங்களை பயன்படுத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
வீட்டுஜெபக்கூட்டங்களுக்கு தங்கள் வீடுகளை திறந்து கொடுக்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864