By Village Missionary Movement
Monday, 06-May-2024இன்றைய தியானம்(Tamil) 06.05.2024
சுவிசேஷ துண்டு பிரதி
"…நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,…" - மத்தேயு 28:19
ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதலை உண்டாக்கியது. அதுமட்டுமல்ல ஒன்பது மிஷனெரிகளை உலகத்திற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆன்மீக சுகத்தையும் பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அதைப் படித்தார்? அதன் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவப் பணியா?
ஆம், ஒருநாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பரை பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில் பட்டது அந்த துண்டு பிரதி! அதின் தலைப்பு "உலகத்தின் மனந்திரும்புதல்". கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். அவர் தனது ஏழு மகன்களையும் இரண்டு மகள்களையும் மிஷனெரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 நபர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே! ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷப் பணியையும் செய்த ஐடா ஸ்கடர் அம்மையார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் கட்டளையாக சொன்னது தான் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி . . . என்று. இயேசுவானவர் தாம் செய்யாத ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்கிறவரல்லவே. இயேசுவானவர் சுவிசேஷம் அறிவித்தும், வியாதிகளை சுகமாக்குகிறவராகவும், வாழ்ந்தும் செய்தும் காண்பித்துள்ளார்.
பிரியமானவர்களே! சுவிசேஷம் அறிவிப்பது என்பது முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடமையுள்ளது. ஒரு கைப்பிரதி ஒருவரை மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர். நாம் கொடுக்கின்ற ஒரு சுவிசேஷ துண்டு பிரதி யாரோ ஒருவரின் இரட்சிப்பிற்கு காரணமாக இருக்கிறது. எனவே நாம் செய்கின்ற கைப்பிரதி ஊழியத்தை பெரிதாக கருதுவோம். கொடுக்க வேண்டிய நபருக்கு ஜெபத்துடன் கொடுப்போம்! ஆண்டவர் நிச்சயம் கிரியை செய்வார். கைப்பிரதிகள் வாங்கும் ஒவ்வொருவரும் பரலோக பிரதிநிதிகளாக தேவன் மாற்றுவார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
அந்தமான்-நிக்கோபாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நமது ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864