By Village Missionary Movement
Thursday, 15-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 15-04-2021
உண்மையும் உற்சாகமும்
“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” – 1 பேதுரு 5:6
வேதாகம கல்லூரியில் படித்து வேத அறிவில் சிறந்து விளங்கிய ஒருவர், தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு திருச்சபையில் ஊழியத்திற்குச் சேர்ந்தார். அவர் மேடையில் ஆராதனை நடத்தவும் பிரசங்கம் செய்யும் ஊழியத்தையுமே எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட ஊழியம் எல்லாரும் சாப்பிட்ட பின்பு மீதியாக இருக்கும் பாத்திரங்களை கழுவும் ஊழியம்! இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், நான் வேதாகமக் கல்லூரியில் படித்து வேதத்தில் தேறினவன்; எனக்கு இந்தப் பாத்திரம் கழுவும் வேலையா? என்று மனதிற்குள் முறுமுறுத்தார். ஆனால் ஆவியானவரோ இப்படிப்பட்ட பெருமையான எண்ணங்கள் தவறானது என்று அவருடைய உள்ளத்தில் உணர்த்தியவுடன் அவர் தேவ சமுகத்தில் தன்னைத் தாழ்த்தி மீண்டும் தன்னை ஒப்புக்கொடுத்தார். அன்றிலிருந்து பாத்திரம் கழுவும் ஊழியத்தை உற்சாகத்தோடு செய்தார். இப்படியே பல மாதங்கள் சென்றன. அந்த திருச்சபையில் கன்வென்ஷன் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டது. அழைக்கப்பட்ட செய்தியாளரிடமிருந்து கடைசி மணிநேரத்தில் “வர முடியவில்லை” என்ற செய்தி வருகிறது. இதனால் கடைசி மணித்துளியில் பிரசங்கிக்கும் வாய்ப்பு இவருக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் அன்று இவரை வல்லமையாய் பயன்படுத்தினார். இதைக் கண்ணாரக் கண்ட மூப்பர்கள், அவரை அநேக இடங்களுக்கு அனுப்பி அவரை தேவசெய்தி அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
ராஜாவாகிய தாவீதின் நாட்களில் தன்னுடைய குமாரனாகிய அப்சலோமுக்கு பயந்து தாவீது ஓடிப்போகையில் ஈத்தாய் என்கிற மனுஷனும் அவன் ஜனங்களும் தாவீதிற்கு பக்க பலமாய் வந்தார்கள். தாவீது அவனைப் பார்த்து நீ நேற்றுத்தானே வந்தாய் திரும்பிப்போய் ராஜாவுடன் இரு என்று சொன்னான். ஆனால் ஈத்தாய் நான் செத்தாலும் பிழைத்தாலும் உன்னுடனே இருப்பேன் என்று சொல்லி எந்த கஷ்டத்தையும் சந்திக்கத் தயாரானான். பின்பு அந்த யுத்தத்தில் மூன்று படைகளில் ஒரு படைக்கு ஈத்தாயை தலைவனாக்கினார் தாவீது.
எனக்கு மிகவும் அருமையானவர்களே! நாமும் கூட புதிதாக ஒரு இடத்தில் வேலைக்கோ, ஊழியத்திற்கோ சென்றிருக்கலாம். நமக்கு புதிய பதவிகளோ, பொறுப்புகளோ கொடுக்கப்பட்டிருக்கலாம். அந்த வேலை மிகக் கடினமாகவோ நம்முடைய தகுதிக்கு மிகவும் குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் ஈத்தாயைப் போல அந்த தேவ ஊழியரைப் போல உண்மையும் உற்சாகத்தோடும் கொடுக்கப்பட்ட பணியை செய்யும்போது தேவன் நம்மையும் உயர்த்துவார். ஆமென்!
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை தேவன் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250