By Village Missionary Movement
Monday, 29-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 29.04.2024
அஸ்திபாரம்
"…தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது;…" - 2 தீமோ. 2:19
கனடா தேசத்தில் பிறந்து வளர்ந்த மிஷனெரி ஜோனத்தான் கோபோர்த் 20-ம் நூற்றாண்டில் சீன தேசத்தில் எழுப்புதல் வர முக்கிய காரணமானவர். இவர் தனது ஐந்து வயதில் சங்கீதங்களை பிழையின்றி வாசிப்பார். வேத வசனங்களை மனப்பாடம் செய்து அவற்றை யாரிடமாவது கூற ஆசைப்படுவார். மேலும் சிறுவயதிலேயே ஆண்டவரை அதிகமாய்த் தேடினார். அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவராக வாழ்ந்து வந்தார். ஆத்தும பாரம் அவரை அதிகமாய் அழுத்தியது. ஹட்சன் டெய்லர் எழுதிய புஸ்தகத்தின் வாயிலாக சீனாவிற்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்து, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சீனாவிற்கு சென்றார். வேத வசனமும், ஜெபமும் மாத்திரமே இவருக்கு ஊன்று கோலாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சீனாவின் மாறுபட்ட சுகாதாரம் அவரையும், அவரது குடும்பத்தையும் தாக்க ஆரம்பித்தது. இரத்த பேதி நோயினால் தனது முதல் பிள்ளையை இழந்தார். அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக தங்களுடைய ஐந்து பிள்ளைகளையும் இழந்து, கணவன் மனைவியாக ஆறுதலற்று இருந்தனர். இருப்பினும் இவர்கள் ஊழியத்தை விட்டோ, ஆண்டவரை விட்டோ பின்வாங்காமல் உறுதியாய் இயேசுவுக்காக ஊழியம் செய்து தன்னுடைய ஓட்டத்தை முடித்தனர். கோபோர்த் ஊழியத்தினால் அநேக சீனர்கள் இரட்சிக்கப்பட்டனர். எல்லாவற்றையும் இழந்த சூழ்நிலையிலும் இவர்களுடைய அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருந்தது.
தாவீதும் அவன் மனுஷரும் யுத்ததுக்கு சென்று திரும்பி வருகின்ற மூன்றாம் நாளில் சிக்லாகு பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், குமாரர் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டார். சகல ஜனங்களும் தங்கள் குமாரர், குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால் அவனை கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்.
பிரியமானவர்களே, தாவீதின் அஸ்திபாரம் கர்த்தருக்குள் இருந்ததினால் தன்னை திடப்படுத்திக் கொண்டார். திடப்படுத்திக் கொண்டதன் விளைவாக பின்பு ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக் கொண்டான். இன்று நம்முடைய அஸ்திபாரம் எதின் மேல் உள்ளது என சிந்திப்போம். பணத்தின் மீதோ, பொருளின் மீதோ, தங்களுக்குப் பிடித்த நபர்களின் மீதோ! கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின் மேல் நம்முடைய வாழ்வு கட்டப்பட நாம் நம்மை அர்ப்பணிப்போம். அப்பொழுது புயல் போன்ற பிரச்சனைகள் நம்மை மேற்கொள்ள வந்தாலும் நம்மை தாக்காது. தேவனுக்காய் ஏதாவது செய்து விடுவோம். நம்முடைய அஸ்திபாரம் உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எவ்வளவு பெரிய மாளிகையாகவும் நாம் உருவாக முடியும்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டவரால் முன் குறிக்கப்பட்ட 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864