By Village Missionary Movement
Tuesday, 13-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 13-04-2021
தாய் மறந்தாலும்
“ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” – ஏசாயா 49:15
கேரள மாநிலம் பாலக்காட்டில் 1999ம் ஆண்டு தெருவில் அலைந்து திரிந்த எட்டுவயது சிறுவனை போலீஸார் அழைத்து விசாரித்தனர். தன் பெயர் அபய் என்றும், அப்பா பெயர் அந்தோணி, சொந்த ஊர் பெங்களூர் என்றும் தெரிவித்தான். தெளிவான விவரங்கள் இல்லாதபடியால் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.
செய்தித்தாள் மூலம் விஷயத்தை அறிந்த சுசீலா என்ற பெண்மணி தன் மகன்தான் அபய் என்றும் நான் பெற்ற மகனை என் மாமியார்தான் அவன் குழந்தையாக இருந்தபோதே என்னிடமிருந்து பறித்து சென்றுவிட்டார்கள் எனக்கூறி சிறுவனை அழைத்துச் சென்றாள். இரண்டு ஆண்டுகள் அபய் சுசீலாவிடம் வளர்ந்தான். அவள் மீண்டும் பாலக்காடு நீதிமன்றத்திற்கு அபயை அழைத்து வந்து, இவனை தவறுதலாக என் மகன் என சொல்லிவிட்டேன். என் கணவர் பெயர் அந்தோணி ஊர் பெங்களூர் என்பதாலும் அழைத்து சென்று விட்டேன் என் மகன் பெங்களூரில் வளர்ந்து வருகிறான், கண்டுபிடித்துவிட்டேன் என ஒரு புகைப்படத்தைக் காட்டி, தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என சிறுவனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாள். காணாமல் போய் தெருவில் திரிந்த நாட்களில் இச்சிறுவன் அழவில்லை. ஆனால் 2 ஆண்டுகள் தாய்ப்பாசத்தை அனுபவித்த அவனால் அந்த தாயைப் பிரிய முடியாமல் கதறி அழுதான். நெஞ்சை உருக்கும் இச்சம்பவத்தை பார்த்த நீதிபதி, அம்மா இவனையும் உங்கள் மகனாகவே பாவித்து வளர்க்கக்கூடாதா? என கேட்டதற்கு அவள் பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டாள். அபய் மீண்டும் காப்பகத்திற்கே அனுப்பப்பட்டான்.
பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் உலகெங்கும் உள்ளனர். ஏன் சில தாய்மார்கள் ஈவு இரக்கமின்றி தங்கள் உல்லாச அல்லது சுயநல வாழ்க்கைக்காக குழந்தைகளை கொன்றும் விடுகிறார்கள். வறுமையினால் தான் பெற்ற குழந்தைகளை விற்றுவிடவும் துணிகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் அனுதினமும் செய்தித்தாள் மற்றும் T.V. மூலம் கேள்விப்பட்டு நம் உள்ளம் துடிக்கிறது.
ஆனால் அன்பே உருவான நம் தேவன், எந்த சூழ்நிலையிலும், அவரை நேசித்து, விசுவாசித்து அவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடவோ, புறக்கணிக்கவோ மாட்டார். எனக்கன்பானவர்களே, நம்மை ஒருபோதும் மறக்காமல், தாங்கி, ஏந்தி, சுமந்து, தப்புவித்து காத்து வருகிற தேவன் நம்மோடிருக்கிறார் என்ற நிச்சயத்தோடு அவரை துதித்து, மகிமைப்படுத்தி வாழுவோம். தேவகிருபை நம்மை தாங்குவதாக!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
புதியதாக ஒத்த தரிசனம் பெற்ற அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களை தேவன் நம்மோடு இணைக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250