By Village Missionary Movement
Wednesday, 10-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 10.04.2024
தரிசனம் இல்லாதவர்கள்
"மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" – 1 கொரிந்தியர் 15:33
கிராமத்தில் பிறந்து உயர்நிலைப் பள்ளியில் உற்சாகத்துடன் படித்து, பின் பட்டணத்திற்குச் சென்று பொறியியல் படிப்பில் தேர்ச்சிப் பெற்ற ஒரு வாலிபனுக்கு அரசாங்கத்தில் நில அளவை செய்யும் வேலை கிடைத்தது. ஒருநாள் அவர் தனது அலுவலக வாகனத்தில் தனக்கு கீழிருக்கிற உதவி எழுத்தாளர்களை அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்கு கீழ் உள்ள நிலங்களை அளப்பதற்குச் சென்றார். அவர் அந்த வேலையை செய்து கொண்டிருக்கும் போது செம்மண் நிலத்திலிருந்து வெள்ளை எலி ஒன்று வெளியே வந்தது.
இந்த அதிகாரிக்கு முன்பாக அந்த எலி அங்குமிங்கும் ஓடியது. அந்த அதிகாரி அலுவலக ரெக்கார்டுகளை தன் சக ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு அந்த எலியை விரட்ட ஆரம்பித்தார். முதலாவது அந்த எலி மெதுவாக ஓடி அவரது ஆர்வத்தைத் தூண்டி அவர் வந்த நோக்கத்தை மறக்கச் செய்து விட்டது. பிறகு அங்கிருந்த ஒரு பொந்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் அவருக்காக காத்திருந்த உடன் அலுவலர்கள் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தனர். திரும்பி வந்த அவர் அவர்களைப் பார்த்து வந்த நோக்கத்தை மறந்து விட்டேனே என, வெட்கத்தோடு தலைகுனிந்தார்.
அதே போல வேதத்திலும் தேவன் சிம்சோன் மேல் வைத்த தரிசனம் பெரியது. யாருக்கும் கிடைக்காத மகா பெரிய பலம் அவனுக்குள் இருந்தது. பெலிஸ்தர் கையில் அடிமையாக கிடந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்கவும், தேவன் விரும்புகிற பாதையில் சேர்க்கவும், தாயின் வயிற்றில் உருவாகிறதற்கு முன்பதாகவே சிம்சோனை தேவன் தெரிந்து கொண்டார். ஆனால் சிம்சோனோ எதிர் மாறான காரியங்களைச் செய்தான். எதை சாப்பிடக்கூடாதோ அதைச் சாப்பிட்டான். யாரோடு சம்பந்தம் செய்யக் கூடாதோ அதைச் செய்தான். யாரோடு சிநேகம் வைக்கக்கூடாதோ அதைச் செய்தான். இறுதியாக தேவன் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றாமல் வெட்கத்தோடும், அவமானத்தோடும் வேடிக்கைப் பொருளாக மாறி மரித்தும் போனான்.
ஆம், நமது தரிசனம் நிறைவேறுவதற்கு உதவும் நண்பர்கள் தேவை தான். அதே நேரம் நாம் படிக்கின்ற பள்ளியானாலும், கல்லூரியானாலும், ஊழியக் களமானாலும் தரிசனமில்லாதவர்கள் நம்மைச்சுற்றிலும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இனம் கண்டுபிடித்து நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். ஏனென்றால் கொட்டாவி விடுகிறவனாய் பார்த்தால் நமக்கும் கொட்டாவி வரும். வாந்தி எடுக்கிறவனைப் பார்த்தால் நமக்கும் வாந்தி வரும். அதுபோலவே தரிசனம் இல்லாதவர்களோடு நாம் கூடியிருப்போமானால் நமது தரிசனத்தை நாம் இழந்து போவோம்.
- Sis. ஜெயசீலா
ஜெபக்குறிப்பு:
நம்மோடு இணைந்து ஊழியம் செய்யும் தெபொராள்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864