By Village Missionary Movement
Saturday, 06-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 06.04.2024
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார்…" - யோபு 19:25
திசையன்விளையில் பள்ளி வளாகத்திலேயே எங்கள் வீடு. இரவு நேரங்களில் சுத்தமாக இருக்கும். பின்பகுதியில் டியூப்லைட் வெளிச்சத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பது வழக்கம். ஒருநாள் வீட்டில் யாருமில்லை இரவு ஏழு மணிக்கு நான் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். திடீரென்று "இப்பொழுது பாம்பு வந்து உன்னைக் கடித்தால் என்ன செய்வாய்?" என்று எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. நான் அந்தக் குரலை மனதின் பிரம்மை என்று நினைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் டெலிபோன் மணி ஒலித்தது. சென்று எடுத்த போது என் மகன் வெளிநாட்டிலிருந்து பேசினான். ஞாயிறு மட்டுமே பேசுகிற அவன் அன்று அவனுக்கு நேரம் கிடைத்ததால் பேசுகிறேன் என்று கூறினான். பேசிமுடித்தபின் வெளியிலுள்ள நாற்காலியில் அமர வந்த போது, அந்த நாற்காலியின் அடியிலிருந்து நீண்ட பளபளப்பான பாம்பு வேகமாக சென்றது. என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் என்னை காக்க என்னுடனே இருக்கிறார் என அவரைத் துதித்தேன்.
ஆகார் "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று அவரை அழைத்தாள். ஆம், தேவன் நம் காயங்கள், பிரச்சனைகள், போராட்டங்களையெல்லாம் காண்கிற தேவன் என்றும் அவையெல்லாவற்றிலும் அவர் நமக்கு உதவி செய்கிறார் என்றும் நாம் விசுவாசிக்கிறோமா? நம் நற்கிரியைகளைக் கண்டு பலன் அளிக்கிறவர் என்று அறிவோமா? அதே சமயம் அவர் நம் இருதயத்தின் பொல்லாத நினைவுகள் அவற்றின் விளைவாகச் செய்யும் மோசமான செயல்களையெல்லாம் பார்க்கிறார் என்ற தேவபயம் உண்டா?
அடுத்தபடியாக அவர் நாம் பேசுவதை அமைதியாகக் கேட்பவர். தேவபிள்ளைகள் பேசுவதை உற்றுக் கவனிக்கிறார். எனவே நம் உரையாடல்கள் மற்றும் வார்த்தைகளில் கவனமாயிருக்க வேண்டும். நாம் உற்சாகமடைய வேண்டிய காரியம் அவர் நம் ஜெபத்தைக் கேட்பவர் என்பது. அடுத்து அவர் பேசுபவர், நம் ஜெபத்திற்கு பதிலளிப்பவர். வேத வசனங்கள், தேவ செய்திகள், சொப்பனங்கள், தரிசனங்கள், உள்ளுணர்வுகள், நபர்கள் சூழ்நிலைகள் இவைகளின் மூலமாக பேசி நம் உலக, ஆவிக்குரிய, ஊழிய காரியங்களில் நமக்கு ஆலோசனை கொடுத்து வழிநடத்துகிறார். தேவனை அறியாது வாழ்கிறவர்களுக்காக ஜெபிக்கிறபோது, அவர்களோடு பேசி அவர்களை இரட்சிக்கிறார். "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் . . ."(யோபு 19:25) என்ற வேத வசனத்தை பலமுறை அறிக்கையிட்டு ஒவ்வொரு நாளையும் துவங்கினால் நம் விசுவாசம் உறுதிப்பட்டு கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேற முடியும்.
இயேசு உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை சீடர்களுக்கு அறிவிக்க மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் சீக்கிரமாக ஓடியதைப் போல இந்த நற்செய்தியை அறிவிக்க நாமும் தீவிரம் காட்டுவோமாக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
சுவிசேஷமுகாம் மூலம் சந்திக்கப்பட்ட வாலிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864