By Village Missionary Movement
Wednesday, 03-Apr-2024இன்றைய தியானம்(Tamil) 03.04.2024
நாம் யார்?
"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு,… இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்." - யூதா 21
தேவன் நமக்கருளின வேதாகமத்திலே, இளையகுமாரன் உவமை மிகவும் பிரசித்தி பெற்றது. இதன்மூலம் ஆவியானவர் பலரோடு பலவிதங்களில் இடைபட்டு அவர்களை மாற்றியிருக்கிறார். இன்றும் தேவன் நம்மோடு பேச நம் இருதயத்தை திறந்து கொடுப்போமா?
ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இளையகுமாரன் தகப்பனிடம் வந்து, "சொத்தில் என் பங்கை பிரித்துக்கொடும்" என்றான். மூத்த மகனோ தகப்பனோடு இருந்து அவர் சொல்லும் வேலைகளை செய்துகொண்டிருந்தான். இளையவன் தான் விரும்பிய அனைத்தையும் பெற்ற மறுகணமே தகப்பனை விட்டு தூரதேசத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு தகப்பன் மீது அன்பு இருந்ததாக தெரியவில்லை. அவரிடமிருந்து எதைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற சுயநலமே இருந்தது. இன்று நம்மில் அநேகரும் இப்படித்தானே இருக்கிறோம். தேவனிடத்திலிருந்து நான் என்னத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்? என்று சுய ஆதாயத்திற்காகவும் ஆசீர்வாதத்திற்காகவுமே சபைக்குச் செல்கிறோம்.
மூத்தவன் இளையவனை விட நல்லவன் என்று நாம் நினைக்கலாம். அவனது மனநிலையையும் சீர்தூக்கிப்பார்த்தால் அவனும் தவறு செய்கிறவனாகவே காணப்பட்டான். மனந்திரும்பி வந்த தன் தம்பிக்காக தகப்பன் ஆயத்தப்படுத்தின விருந்தில் பங்குகொள்ளமுடியாதபடி இவனுக்குள் பொறாமை பொங்கி எழுந்தது. கெட்டு சீரழிந்துபோன தன் தம்பிக்குக் கிடைக்கும் கனத்தைக் கண்டு கடுங்கோபமடைகிறான். தகப்பனிடம், "இத்தனை ஆண்டுகளாய் உமக்கு கீழப்படிந்திருந்த எனக்கு இதுபோல என்றைக்காவது செய்ததுண்டா?" என்று கேட்கிறான். இன்று நம்மில் அநேகருக்கும் இப்படிப்பட்ட மனநிலை உண்டு. தகுதியற்றவர்கள் நன்மை பெறும்போது அவர்கள் மேல் பொறாமை கொள்கிறோம். மற்றவர்களோடு ஒப்பிட்டு இவர்கள் தகுதிக்கு மிஞ்சி ஆசீர்வதிக்கப்பட்டிருக்க தகுதியான நானோ யாதொன்றையும் பெறவில்லையே! என்று குமுறுகிறவர்களாய் இருக்கிறோம்.
பிரியமானவர்களே! நாம் இவ்விருவரின் மனநிலைகளையும் விட்டுவிட்டு, தகப்பனின் உள்ளத்தோடு வாழ முயற்சிப்போம். பிள்ளைகளின் குறை குற்றங்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்களை நேசித்த தகப்பனின் அன்பே விசேஷமானது. மனம் மாறிவந்த இளையகுமாரனையும் எதிர்கொண்டு ஓடி கட்டி அணைக்கிறார். கோபத்தோடு வெளியே நின்ற மூத்தவனையும் தேடி வெளியே வந்து வருந்தியழைக்கிறார். ஆ! என்னே அன்பு! இன்றும் குடும்பத்திலானாலும் ஊழியத்திலானாலும் மூத்தவனின் மனநிலையோடும் இளையவனின் மனநிலையோடும் காணப்படும் இரு கூட்டத்தார் உண்டு. அவர்களை தகப்பனின் உள்ளத்தோடு நேசித்து, இயேசுகிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாக வாழ்வோம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ள நமது பணித்தளங்களில் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864