By Village Missionary Movement
Wednesday, 27-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 27.03.2024
சமாதானத்திற்கு ஏற்றவைகள்
"உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன்சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்,... மறைவாயிருக்கிறது…" - லூக்கா 19:42
ஓர் தேவமனிதர் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திருடன் ஒருவன் அவரை வழிமறித்தான். அவரிடத்தில் அவனுக்கு ஒன்றும் அகப்படவில்லையாதலால் அவன் திரும்ப நினைத்தான். அந்த தேவமனிதர் அவனிடத்தில் ஓர் கற்கண்டு பானத்தை அவனிடம் நீட்டினார். அவனோ, "நான் லெந்து நாட்களில் இனிப்பு சாப்பிடமாட்டேன்" என்று சொல்லி அதை வாங்க மறுத்து விட்டான். பாருங்கள் கிறிஸ்தவ ஒழுக்கம் அவனிடத்தில் இல்லை. ஆனால் கிறிஸ்தவ சடங்காசாரத்தில் கவனமாயிருந்தான். லெந்து காலத்தில் நம் நிலைப்பாடு எப்படி?
வேதம் தேவனிடத்திலிருந்து நமக்கு வந்த திறந்த கடிதம். அதில் மனிதனைக் குறித்து அவரது அபிப்ராயத்தை எழுதியுள்ளார். அது என்ன? முழு மனித இனமும் ஒருவர் விடாமல் பாவம் செய்து தேவமகிமையையும் தேவ சமாதானத்தையும் இழந்து விட்டது என்பதே அது. தேவ சமாதானத்தைப் பெற்றுக் கொண்டால் தேவ மகிமையையும் அடையமுடியும். அந்த தேவசமாதானத்திற்கு ஏற்றவைகள் யாவை? இரட்சிப்பு, தேவனோடுள்ள ஐக்கியம் ஆகியவைதான். அதைத் தொடர்ந்து நித்திய ஜீவனை நோக்கி நாம் ஓடும் ஓட்டம் தேவமகிமையையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. அநேக கிறிஸ்தவர்களுக்குக் கூட இந்த உண்மைகள் தெரிவதில்லை. கிறிஸ்தவர்களாக இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்ற சாத்தானின் பொய்யை நம்புகிறார்கள். நாம் அனுசரிக்கும் கிறிஸ்தவ சடங்காச்சாரங்களான பக்திக்குரிய காரியங்களோ எந்த நற்கிரியைகளோ நம்மை இரட்சிக்காது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே சகல பாவங்களையும் கழுவி நம்மை இரட்சிக்கும். எல்லோரும் பாவிகளாக இருந்தாலும் எல்லோரையும் இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே இரட்சிக்க முடியும். எனவே இதுவரை இரட்சிக்கப்படாதவர்கள் இந்த லெந்து காலத்தில் இலவசமான விலையேறப்பெற்ற இரட்சிப்பைப் பெற்றுவிடுங்கள். இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தால் முடிவு வரை நிலைத்திருக்க தேவனோடுள்ள ஐக்கியம் மிக முக்கியம்.
அன்று பக்தி நிறைந்த பிரதான ஆசாரியரும், மூப்பரும் தீய பரபாசை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இயேசுராஜாவின் ஆளுகையைத் தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றும் அநேகர் சாத்தானுக்கு தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து இயேசுராஜாவின் ஆளுகையை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வதில்லை. நமக்கு கிருபையாக கிடைத்த இந்த நாட்களிலாவது சமாதானத்துக்கு ஏற்றவைகளை அறிந்து கொள்வோமாக! காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோமாக! இன்றே இரட்சண்ய நாள்!!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் கட்டிட வேலைகளுக்காக, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864