By Village Missionary Movement
Monday, 25-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 25.03.2024
தியாகத்தை நினைத்திடு
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" - ரோமர் 5:8
ஒருமுறை மேற்கு பென்சில்வேனியாவை ஒரு பலத்த சுழற்காற்று தாக்கியது. அங்குள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு குழிகளுக்குள் தங்களை மறைத்துக் காத்துக் கொண்டனர். டேவிட் கோஸ்டீவா என்ற மனிதர் அந்தப் புயலின் போது ஒரு விளையாட்டு மைதானத்தில் நடுவராக நின்று விளையாட்டை நடத்திக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டை அவரது சகோதரியின் மகள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். புயலின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட டேவிட் கோஸ்டீவா உடனடியாக அந்தச் சிறுமியை இழுத்துச் சென்று குழிக்குள் இறக்கிவிட்டு அதன் மேற்பரப்பில் படுத்துக் கொண்டார். இமைப்பொழுதில் அச்சுழற்காற்று அவரை அடித்துச் சென்றுவிட்டது. அச்சிறுமியோ காப்பாற்றப்பட்டாள். தன் சகோதரியின் மகளுக்காக தன் உயிரைத் தியாகம் செய்தார் டேவிட் கோஸ்டீகா.
அப்.பவுல் ரோமாபுரியாருக்கு இப்படியாக எழுதுகிறார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார் என்று. அதாவது நாம் பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே தமது அளவற்ற அன்பினால் நம்மை மீட்டுக் கொள்ளும்படி, தேவன் தமது ஏக புதல்வனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். நாம் பாவத்தினின்று விடுதலை பெற வேறு எந்தப் பரிகாரமும் கிடையாது. நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி அவர் நமக்காக ஜீவனைவிட்டார்.
இதை வாசிக்கின்ற அன்பானவர்களே! அவர் நம்முடைய அக்கிரமத்திற்காகவும், பாவத்திற்காகவும் மரித்தார் என்று விசுவாசித்து, உண்மையை உணர்ந்தோம் என்றால், நாம் இன்னும் பாவத்தோடு விளையாடிக்கொண்டிருக்க மாட்டோம். நாம் விரும்புகிறபடி வாழும் பாவ வாழ்வை விட்டு எழும்புவோம். ஆண்டவர் செய்த தியாகத்தை நினைத்துப் பார்ப்போம். நம் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவோம். மேலும் நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்த இயேசுவுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இலவசமாய் நாம் பெற்ற பாவமன்னிப்பின் நிச்சயத்தை மற்றவர்களுக்கும் அறிவிக்க ஆயத்தப்படுவோம். சிலுவை, தியாகத்தின் சின்னம்! இயேசுகிறிஸ்து தன் உயிரையே தியாகமாய் சிலுவையில் கொடுத்துவிட்டார். அத்தியாகத்திற்கு ஈடாக என்ன செய்யப்போகிறோம்?
சிலுவையை நோக்கிப்பார்ப்போம்
சிலுவையண்டை வருவோம்
சிலுவை சுமப்போம்
சிலுவையினால் உண்டாகும் விடுதலையை அறிவிப்போம்.
- Bro. குணசீலன்
ஜெபக்குறிப்பு:
நமது வட இந்திய ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864