By Village Missionary Movement
Thursday, 21-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 21.03.2024
பப்பாளி !
"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய்... நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்" - மாற்கு 9:43
கிருபாவின் வீட்டெதிரே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புல்வெளியின் நடுவே பப்பாளிச் செடி ஒன்று முளைத்திருந்தது. அவளுக்கு ஒரே சந்தோஷம். நித்தம் நித்தம் அதன் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வந்தாள். இரண்டு மாதம் கடந்த நிலையில் பப்பாளிச் செடி சற்றே சாய்வாகக் காட்சியளித்தது. நாட்கள் கடந்து போகப்போக செடி மரமானது. ஆனால் சாய்வாகவே இருந்தது. கிருபாவுக்கு ஒரே கவலை. மரம் கனி தரும் தருவாயில் பாரம் தாங்காமல் விழுந்து விடுமோ என்ற அச்சம். பூப்பூத்து, காய் தோன்றி மெல்லப் பெரிதாகி பத்துப் பன்னிரெண்டு காய்களைத் தாங்கி சாய்வாகவே நின்றது. மெல்ல பச்சை நிறம் மாறி மஞ்சளும் சிவப்பும் கலந்து கனியானது. வழிப்போக்கர்களின் பார்வை முழுவதும் அதின் மேலேயே இருந்தது. ஒருநாள் அவ்வழியே வந்த ஒரு ஏழை மனிதர் சுற்றுமுற்றும் பார்த்து இரண்டு பப்பாளிப் பழத்தை பறித்து முகமலர்ச்சியுடன் தன் பைக்குள் வைத்துக் கொண்டார்.
கோணலாக, சாய்வாக வளர்ந்திருந்தாலும் தன் காலத்தில் தன் கனியைக் கொடுத்துப் பிறவிப் பயனை நிறைவேற்றிய அந்த மரத்தைப் பார்த்த கிருபாவுக்கு வேதத்தின் வசனமொன்று நினைவுக்கு வந்தது. "நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்." என்ற வசனமே!
ஆம், பிரியமானவர்களே, நாம் அந்த மரத்தைப் போல் குறைபாடு உடையவர்களாய் இருக்கலாம். படிப்பறிவு இல்லாமல் இருக்கலாம். வசதியில்லாத ஏழ்மை நிலையிலும் இருக்கலாம். ஆனால் நம் வாழ்வில் ஆண்டவர் எதிர்பார்க்கும் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய சாந்தம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், இச்சையடக்கம் போன்ற கனிகள் இல்லையென்றால் நாமும் கூட அக்கினியில் போடப்படும் மரத்துக்கு ஒப்பாவோம். கனி தரும் வாழ்வு மட்டுமே அர்த்தமுள்ளது. பப்பாளி தோற்றத்தில் குறைபாடு இருந்தாலும் தரமான கனியைப் பசியுடைய பலருக்குக் கொடுத்து தன் பணியை நிறைவு செய்தது அல்லவா? நாம் கனி தரும் வாழ்வு வாழத் தடையாக இருக்கும் காரியங்களைத் தறித்து போட்டு விடவேண்டும். நீ இரண்டு கண் உடையவனாய் கனி கொடாமல் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒற்றைக் கண்ணனாய் கனி தந்து தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது நல்லது என்ற சத்தியத்தை மாற்கு 9:47 மூலம் நாம் அறியலாம். வாழ்வது ஒரு வாழ்க்கை, நீதியாய் நடந்து, நற்கிரியை செய்து கனி கொடுத்து வாழ முயற்சி செய்வது அவசியம். ஒவ்வொரு நாளின் முடிவிலும் இன்று எந்த நற்செயலால் ஆண்டவரை சந்தோஷப்படுத்தி இருக்கிறேன் என்று சுயபரிசோதனை செய்வோமா?
உன் எஜமானாகிய இயேசுவை சந்திக்கும் நேரம் வரும் போது கனிகளோடு அவரை எதிர்கொள்ள ஆயத்தப்படுவோமா? கர்த்தர் கொடுக்கிற ஒவ்வொரு நாளும் அவர் உன் பேரில் மகிழ்ந்திருக்கத்தக்க செயலைச் செய்வதில் ஜாக்கிரதையாய் இருப்போமா? எந்த சாக்குப் போக்கும் சொல்லி அவரை துக்கப்படுத்தாதே. உனக்காக தன் ஜீவனைக் கொடுத்தவருக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:
நமது பணித்தளங்களில் ஆலயம் கட்டுவதற்கு உதவி செய்யும் குடும்பங்களை தேவன் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864