By Village Missionary Movement
Wednesday, 20-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 20.03.2024
புரியாத புதிர்கள்
"நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்" - சங்கீதம் 119:67
கரடி ஒன்று வழிதவறி காட்டைவிட்டு வெளியேறி அருகிலுள்ள ஊருக்குள் வந்துவிட்டது. அதைக்கண்ட மக்கள் அதைக் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடியோ பயத்தினால் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கொல்லாமல், காட்டுக்குள் அனுப்பிவிட ஊர்மக்கள் தீர்மானித்தனர். அதற்கென்று வேடன் பயன்படுத்தும் ஒரு கண்ணியை வைத்தனர். கரடி உணவு சாப்பிட அருகில் வந்தபோது கால் அதில் மாட்டிக்கொண்டது. பின்பு அதை கயிற்றினால் கட்டி காட்டில் விட முயற்சித்தனர். ஆனால் கரடியோ அருகில் வந்தவர்களை பயமுறுத்தும்விதமாக உறுமிக்கொண்டேயிருந்தது. பின்பு மயக்கமருந்து நிறைந்த ஒரு துப்பாக்கியை வைத்து அதை மயக்கமடையச் செய்தனர். காலில் சிக்கிய கண்ணியிலிருந்து விடுவித்தனர். இதினால் சிறிது காயமும் கரடிக்கு ஏற்பட்டது. பின்பு அதைக் கட்டி காட்டில் பத்திரமாய் போய் அவிழ்த்துவிட்டனர். சிலமணிநேரத்தில் மயக்கத்திலிருந்து விடுபட்டு கரடி காட்டிற்குள் சென்றுவிட்டது.
இந்த நிகழ்ச்சியினூடே கரடி என்ன சிந்தித்திருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்ப்போம். முதலாவது ஊருக்குள் வந்த தன்னை மக்கள் காட்டுக்குள் விரட்டியதின் மூலம் மனிதர்கள் ஏதோ மோசமானவர்கள் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். துப்பாக்கியால் அதை மயக்கமடையச் செய்தபோது மனிதர்கள் தன்னை கொல்லப்போகிறார்கள் என எண்ணியிருக்கும். ஆனால் கரடியின் இந்த சிந்தனையெல்லாம் தவறானது என நாமறிவோம். ஒருவேளை மனிதர்கள் என்ன நினைத்து ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாததால் இந்த தவறான எண்ணம் அக்கரடிக்கும் வந்திருக்கும்.
நாமும் சில நேரங்களில் நம்முடைய நன்மைகளுக்காக சில பாடுகளை தேவன் நம் வாழ்வில் அனுப்பும்போது தவறான சிந்தனைகளுக்குள் செல்கிறோம். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வில் பாடுகளும், சிலுவைகளும் இன்றியமையாததாகும். ஆனால் தேவன் நம்மை பாடுகளுக்குட்படுத்தி ஏதோ மகிழ்ச்சி காண்கிறார் என்ற தவறான எண்ணம் நமக்குள் வந்துவிடக்கூடாது. பாடுகளின் முழு அர்த்தத்தையும் இந்த பாவ சரீரத்தில் நாம் வாழும்போது முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. மேற்கண்ட சம்பவத்தில் கரடியால்,"மக்கள் செய்யும் அனைத்தும் தனது நன்மைக்கே" என புரிந்து கொள்ள இயலாதது போல நாமும் கூட நம் வாழ்வில் வரும் அனைத்துப்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடியாதவர்களாய் இருக்கலாம். ஆனால் பரலோகத்தில் நாம் போய் சேர்ந்த பின்பு இவை அனைத்திற்கும் தெளிவான பதில் நமக்குக் கிடைக்கும். அதைவிட நமக்காக சிலுவையில் பாடுபட்டு மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் முகத்தை நாம் முகமுகமாய் பார்க்கும் வேளையில் இந்த கேள்விகளே நம் இருதயத்தில் எழாதபடி நம் இருதயம் பூரிப்பாகும்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் முகாம் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்களுக்கு இயேசுவின் பரிசு என்ற கிப்ட் தர உள்ளோம். இதின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864