By Village Missionary Movement
Monday, 18-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 18.03.2024
தேவன் தெரிந்து கொள்ளும் விதம்
"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்" - 1 கொரி. 1:28
இன்று நம் காலங்களிலும் வேதாகம காலங்களிலும், பல குறைவுபட்ட நபர்களையே தேவன் தெரிந்துகொண்டு பயன்படுத்தியிருக்கிறார்.
அற்பமாய் எண்ணப்பட்ட லேயாள் மூலம் தேவனுக்கேற்ற ஊழியர் சந்ததி பிறந்தது. பல ஆண்டுகளால் மலடியாயிருந்து நிந்திக்கப்பட்ட அன்னாள் மூலம் தலைசிறந்த தீர்க்கதரிசியும், நியாயாதிபதியுமாகிய சாமுவேல் தோன்றினார். ராகாப், தாமார், ரூத் போன்றவர்கள் வழியில்தான் இயேசுகிறிஸ்துவும் பிறந்தார். புதிய ஏற்பாட்டில் சமாரிய ஸ்திரீ, சகேயு போன்றவர்களும் சமுதாயத்தில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களே.
யோசேப்பு, தாவீது போன்றவர்களும் சகோதரர்களால் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள். அப். பவுல் சரீரத்தில் பெலவீனமான தோற்றமுடையவர். வில்லியம் கேரி செருப்பு தைத்தவர். D.L. மூடி படிப்பில் குறைந்தவர், பேச்சில் மற்றவர்களால் குறைவாக மதிக்கப்பட்டவர். எழுப்புதல் வீரராக செயல்பட்டார். ஊனமுற்ற சாரா டக்கரின் தியாகத்தின் பணி யாரால் மறக்க முடியும்.
நமது காலத்தில் வாழ்ந்த பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் சரீர குறைபாடுகளோடு தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டார். இன்றும் நம் மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் அநேகர் சரீர குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் தேவனால் பயன்படுத்தப்படும் பாத்திரமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
"நிக்" என்ற மனிதர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தவர். தனது 13 வது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாற்றைப் படித்தார் நிக். அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கோல்ப் விளையாடியதைப் படித்த போது நிக்கின் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.
இயேசுவை வெறுத்த நிக், இயேசுவை பறைசாற்ற முடிவு செய்தார். இவருடைய விசுவாச பேச்சு, அநேகரை கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இவர் 60 நாடுகளுக்கு மேலாக சென்று லட்சக்கணக்கான மக்கள் ஆண்டவரை அறிய காரணமாயிருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் பெற்று உலக வாழ்க்கையிலும் அநேக ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் தேவஜனமே உங்களுக்குள்ள பெலவீனத்தை, இயலாமையை எண்ணி கலங்குகிறீர்களோ? என்னால் என்ன செய்ய முடியும் என்று தயங்குகிறீர்களோ? ஆண்டவரே என்னைக் கொண்டு உம் விருப்பப்படி எதையும் செய்யும். என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என அர்ப்பணியுங்கள். எழுப்புதலில் உங்களை அவர் பயன்படுத்துவார்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
இந்த வருட கோடை விடுமுறையில் VBS ஊழியங்கள் மூலம் 3000 கிராமங்களில் சிறுவர்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864