By Village Missionary Movement
Tuesday, 12-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 12.03.2024
இது நியாயமா?
"பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து . . .காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்;…" - 2 இராஜா. 7:9
அநேக மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நீண்ட தூரப் பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் அநேகர் ஆகாரமில்லாமல் பசியின் கொடுமையால் இறந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒரு நபரிடம் மட்டும் பாத்திரத்தில் ஆகாரம் இருக்கிறது. அந்த ஆகாரத்தின் தன்மை என்னவென்றால் பிறருக்கு அதைக் கொடுக்கக் கொடுக்க அந்த ஆகாரமும் குறையாமல் பெருகும். அப்படிப்பட்ட அதிசயமான ஆகாரம் அது. ஆனால் இந்த நபரோ அதை யாருக்கும் கொடுக்கவில்லை. ஆகாரமில்லாமல் அநேகர் தன் கண்முன்னே இறந்து போகிறதைக் கண்டும் கொஞ்சமும் கவலையற்றிருந்தார். இந்த சம்பவம் நமக்கு நியாயமாகத் தோன்றுகிறதா?
பரி.வேதாகமத்தில் 2 இராஜாக்கள் 6,7 அதிகாரங்கள் இஸ்ரவேல் தேசமக்கள் மிகமிகக் கொடிய பஞ்சத்தில் அகப்பட்ட பட்சத்தில் தேசத்து குஷ்டரோகிகள் நான்கு பேர் இரவோடு இரவாக பஞ்சத்திற்குக் காரணமாகிய தங்கள் தேசத்தை முற்றுகை போட்ட சீரிய இராணுவத்தின் பாளையத்திற்குள் வந்து பார்த்தார்கள். அங்கு ஒருவரும் இல்லாதிருப்பதைக் கண்டு எதிரிகளின் கூடாரத்திற்குள் பிரவேசித்துப் புசித்துக் குடித்தார்கள். அவர்கள் விட்டுவிட்டுப்போன உடைமைகளில் சிலவற்றைக் கொள்ளையிட்டார்கள். பின்பு உணர்வடைந்தவர்களாய் நம் தேச ஜனங்கள் பட்டினியால் சாகும்போது நாம் மட்டும் சாப்பிட்டுத் திருப்தியடைவது நமக்கு நியாயமல்ல. இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள். நாம் மௌனமாயிருந்து பொழுதுவிடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம் மேல் சுமரும் என்று சொல்லி இரவோடு இரவாக சென்று இராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.
இதை வாசிக்கின்ற கர்த்தருடைய ஜனமே, மனுக்குலம் பாவத்திலும், அக்கிரமத்திலும், மீறுதலிலும், வேதனையிலும், மரணப்பிடியிலும் சிக்கித் தவித்தது. அதை மீட்க தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார். இதனால் நீயும் நானும் அழிவிலிருந்து காக்கப்படுகிறோம். வருங்காலத்தில் பரலோகத்தில் அவரோடு இருக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் எத்தனையோ பேர் இந்த சத்தியத்தை அறியாமல் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் நற்செய்தி அறிவிக்க வேண்டிய காலம் இது! பட்டினியால் சாகும் மக்களைக் குறித்த அக்கறையும், கரிசனையும் அந்த குஷ்டரோகிகளுக்கு இருந்தது. நாம் எப்படியிருக்கின்றோம்? பொழுதுவிடியும் வரை காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் என்பதை உணர்ந்த குஷ்டரோகிகள் உடனடியாக செயல்பட்டனர். இந்த குஷ்டரோகிகளுக்கு இருந்த உணர்வில் இன்று கொஞ்சமாவது நம்மிடமிருக்கிறதா? நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்.
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
சிறுவர்களுக்கான கிட்ஸ் டிவி சேனல் துரிதமாக ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864