By Village Missionary Movement
Friday, 09-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 09-04-2021
மறக்காத தேவன்
“....நீ என்னால் மறக்கப்படுவதில்லை.” – ஏசாயா 44:21
அன்று இரு சக்கர வாகனத்தில் ராம்நாடு மாவட்டத்திற்கு ஊழியத்திற்கு சென்றிருந்தார் என் கணவர். ஊழியத்தை முடித்துவிட்டு திரும்பும்போது ஒரு பெரிய விபத்து. போட்டிருந்த ஹெல்மெட் பறந்து விழுந்தது. அதன் உட்புறமெல்லாம் இரத்தம், தலையில் அடிபட்டு மூக்கிலும், வாயிலுமிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. மிக சீரியஸான கண்டிஷன். உடனே மதுரை மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. சாயல்குடியிலிருந்து மதுரைக்கு 3.30 மணி நேரம். விரைந்து சென்றது ஆம்புலன்ஸ். அவருக்கோ சுயநினைவில்லை அப்போது தான் எனக்கு போன் வருகிறது. மறுமுனையிலிருந்து விபரத்தை கேட்டவுடன் மறுவினாடி ஒன்றுமே யோசிக்கவோ, செயல்படவோ முடியவில்லை, முழங்கால்படியிட்டேன். ஆண்டவர் “என்னால் மறக்கப்படுவதில்லை” என்று வசனத்தை கூறி என்னை திடப்படுத்தினார்.
இரவு 7 மணிக்கு மேல் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் Sorry தலையில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்ய வேண்டும். உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். ஒருவேளை அவர் பிழைத்தாலும் கை, கால்கள் வராமல் போகலாம். இல்லையென்றால் பழையவை எல்லாமே மறந்து போகலாம். இல்லை கோமா ஸ்டேஜிக்குப் போகலாம் என்றனர். எங்கள் ஊழியர்கள் அனைவரும் சில மணி நேரத்திற்குள் ஸ்தம்பித்து நின்றனர். கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆப்ரேஷன் நடந்தது. பலமணி நேரங்கள் கழித்து கண் விழித்தார். உள்ளே தயக்கத்தோடு, வேதனையோடு பயத்தோடு சென்றேன். அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டு, என்ன நடந்தது என்று கேட்டார். அல்லேலூயா! கை கால்கள் செயல்பட்டது. இன்றும் 6 வருடங்களாக ஆண்டவருடைய ஊழியத்தை புதுபெலனோடு நிறைவேற்றி வருகிறார்.
ஆம், ஆண்டவர் கொடுத்த வார்த்தையான “உன்னை மறப்பதில்லை” என்பதே என் நம்பிக்கைக்கு காரணமாயிருந்தது. மறப்பதில்லை என்றால் நினைத்துக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். சர்வ பூமிக்கும் ஆண்டவருடைய நினைவில் இருக்கும் ஒருவரை எப்படி கைவிடமுடியும்? அவருடைய உள்ளங்கையில் பொறிக்கப்பட்டுள்ள வரை எவரும் பறிக்கவோ, தீங்கிழைக்கவோ முடியாது. ஆம், இந்த உலகிலுள்ள எந்த மனிதர்களும் நம்மை மறக்கலாம், ஆனால் ஆண்டவரோ நம்மை மறப்பதேயில்லை.
அன்பான சகோதரனே, சகோதரியே! என் வாழ்வின் கண்ணீரை களிப்பாய் மாற்றின கர்த்தர், உங்கள் வாழ்விலும் அற்புதம் செய்வார். ஒருவேளை நீங்கள் துன்பத்தில் துவண்டு, வேதனையின் படுகுழியில் மூழ்கி ஆண்டவர் என்னை மறந்தாரோ? என எண்ணி சோர்ந்துபோய் இருக்கிறீர்களோ? கலங்காதீர்கள். அவர் உங்களை மறக்கவில்லை, அவர் உங்கள் உபத்திரவத்தை அற்பமாய் எண்ணாதவர், உங்கள் கண்ணீரைக் காண்கிறவர், உங்கள் அழுகையின் சத்தத்தைக் கேட்கிறவர். நிச்சயம் அற்புதம் செய்வார். அவருடைய நினைவில் எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து போக வேண்டாம். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
- Mrs. ஜோதி ஆனந்த்
ஜெபக்குறிப்பு:
40 நாட்கள் நடைபெறும் இம்முகாமின் பணத்தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250