By Village Missionary Movement
Monday, 04-Mar-2024இன்றைய தியானம்(Tamil) 04.03.2024
இன்றே இரட்சண்ய நாள்
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" - லூக்கா 19:10
தொலைக்காட்சியில் Breaking news: சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு நடைபெற்ற மீட்புப் பணியில் இன்று 16 வது நாள். இடைவிடா முயற்சிக்குப் பின் 17 வது நாளாக வந்த செய்தி இது, "இன்று மாலைக்குள் மீட்கப்பட்டு வெளியே வந்து விடுவார்கள்" என்று! இச்செய்தியை டிவியில் பார்த்த, கேள்விப்பட்ட, செய்தி வாசித்த ஒவ்வொருவரும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 நபர்களை தன் வீட்டின் உறவாக நினைத்து பதைபதைத்துக் கொண்டிருந்தனர்.
41 ஆம்புலென்ஸ்கள், மருத்துவர்கள் குழு, தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத பணி, கிரேன் டிரைவர்கள், உதவியாளர்கள், தொழிலாளர்கள், சிக்கித் தவிப்பவர்களின் உறவுகள், பொதுமக்கள், ஆட்சியாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் என மக்கள் கூட்டம் அந்த இடத்தில் குவிந்து விட்டார்கள். பரபரப்பும், பதைபதைப்பும் நிறைந்து காணப்பட்டாலும் அனைவரின் மனதிலும் இன்று 41 பேரும் மீட்கப்பட்டு விட வேண்டும் என்பதே ஒரே கவலை. அந்த சூழலில் அனைவர் முகத்திலும் ஒரே எண்ணம், ஒரே முனைப்பு, ஒரே வேண்டுதலாக ஒருமனம் மட்டுமே மேலோங்கி காணப்பட்டது.
இருள் நிறைந்த சுரங்கத்தினின்று பரந்த உலகின் வெளிச்சத்திற்கு வர இருக்கும் 41 பேரின் மீட்புப் பணியின் வெற்றிக்காக ஒரே நேர்கோட்டுச் சிந்தனையோடு காத்திருக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண முடிந்தது. இறை வேண்டுதல் செய்தோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. ஆம், அவர்களின் ஒரு மனம் வெற்றி பெற்றது. பலத்த ஆரவாரத்தோடு 41 பேர்களும் ஒருவர் பின் ஒருவராக இருண்ட சுரங்கத்திலிருந்து வெளியேறும் காட்சியும், அதன்பின் அவர் தம் உறவுகளும், உழைத்தோரும் பூரிப்படையும் வண்ணம் நடந்த உணர்வுப்பூர்வமான தருணங்களையும் விவரிக்க வார்த்தையால் இயலாது.
அன்புக்குரியவர்களே! நாடறிந்த இந்த நிகழ்வு ஒரு "மீட்புப் பணி" யின் மேன்மையை, உன்னதத்தை, அவசியத்தை அழகாக வலியுறுத்தியதை உணர முடிகிறது அல்லவா? திருமறையில் ". . . மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்" . . . என்று லூக்கா 15:7ம் வசனத்தில் வாசிக்கிறோம். ". . . இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரி(க்கும்)க்க வல்லது." (1யோவான் 1:7) இந்த நற்செய்தியை நீங்கள் அறிந்ததுண்டா? நீங்கள் மீட்கப்பட்டு, இந்த இரட்சிப்பின் அனுபவத்தை அறிவீரா? ஆம்! என்பது உங்கள் பதிலானால் உங்கள் மீட்பின் நிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிருப்பது நிச்சயம். ஒரு வேளை இல்லை என்பது உங்கள் பதிலாக இருக்குமானால் இன்றே ஒரு தீர்மானம் எடுக்க முன்வர வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு எடுக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது என்ற நல்ல செய்தியை இந்த நொடி நம்புவீர்களானால் நீங்கள் அவருடைய பிள்ளையாகிறீர்கள். உங்கள் மீட்பினை பரலோகம் கொண்டாடுவது நிச்சயம்! தாமதிக்க வேண்டாம்! இதோ இப்பொழுதே அநுக்கிரக காலம்!! இப்பொழுதே இரட்சண்ய நாள்!!!
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் 120 மிஷனெரிகள் புதிதாக நமக்கு கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864