By Village Missionary Movement
Wednesday, 28-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 28.02.2024
பரிசு
"…அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" - யோவான் 3:16
பரிசு அன்பின் வெளிப்பாடாக உள்ளது. பொதுவாக ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் அன்பளிப்புதான் பரிசு என்று சொல்லப்படும். இந்த பரிசானது எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும் ஒன்றாகும். நண்பர்களிடையே பகிரப்படும் பரிசு, குடும்ப உறவுகளுக்கு இடையில் வழங்கப்படும் பரிசு என பலதரப்பட்ட பரிசுகள் உள்ளன. மேலும் பிறந்தநாள், திருமணநாள் என இதற்கென கொடுக்கப்படும் பரிசும் விசேஷமானது. இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் அன்பு இருந்தால் மட்டுமே பகிரப்படும். அன்பில்லாமல் எதையும் கொடுக்க முடியாது. உதாரணமாக நாம் சொல்வோம் என்றால் அன்னை தெரசா, கிரஹாம் ஸ்டெயின்ஸ் இவர்கள் எல்லாரும் தேவன் மீதுள்ள அன்பினிமித்தமாக நோயுற்ற மக்களுக்கு இலவசமாக தங்கள் சேவைகளை வழங்கினர்.
வேதத்தில் ஐசுவரியமுள்ள ஒரு மனுஷனைக் குறித்தும், லாசரு என்னும் பேர் கொண்ட ஒரு தரித்திரன் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இவ்விருவரையும் கர்த்தர் உண்டாக்கினார். ஆனால் இந்த லாசரு ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். இவ்விருவரும் ஒரு நாள் மரித்தனர். தரித்திரன் மரித்து தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஐசுவரியவானும் மரித்து பாதாளத்திற்கு சென்றான். ஐசுவரியவான் பூமியில் ஜாம் ஜாம் என வாழ்ந்து பின் பாதாளத்திற்கு செல்வது என்பது எவ்வளவு பரிதாபமான நிலைமை! ஐசுவரியமுள்ளவனாய் வாழ்ந்தும் அன்பில்லாதவனாய் மரித்து தன்னுடைய ஓட்டத்தை முடிக்கிறான்.
பிரியமானவர்களே! பணம், பதவி, பெயர், புகழ் மட்டுமே ஆசீர்வாதம் என்று நினைக்கிறோம். அவர் என் மீது மிகுந்த அன்பாயிருக்கிறார் என்றும் நினைக்கிறோம். அவருடைய அன்பை ஆசீர்வாதத்தினால் மட்டுமல்ல; குறைவிலும் தேவனுடைய சிட்சையிலும் ஒன்றும் இல்லாத நிலைமையிலும் கூட ருசிபார்க்கலாம். "அன்பில்லாமல் நாம் கொடுக்கமுடியாது, கொடுக்காமல் நம் அன்பை வெளிப்படுத்த முடியாது" என்றார் அன்னை தெரசா. பிதா நமக்கு அன்பின் பரிசாக இயேசுவை இந்த பூமிக்கு கொடுத்துள்ளார். நாமும் அவருடைய அன்பினால் நிறைந்தவர்களாக இயேசுவை பரிசாக பிறருக்கு கொடுப்போம். நம்மிடம் உள்ளதை தேவையுள்ளோருக்கு கொடுத்து பிறரையும் மகிழ்ச்சியாக்குவோம்.
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:
வட இந்திய மிஷனெரிகளின் சுகத்திற்காக; ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864