By Village Missionary Movement
Thursday, 08-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 08.02.2024
விதைகள் பலவிதம்
"…மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" - கலா. 6:7
"ஒரு மனிதனின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்" என்று வேதம் கூறுகிறது. அதாவது ஒரு மனிதனின் இதயத்து நினைவுகளின்படியே அவனது செயல்களும் அமைகின்றன. ஒரு மனிதனின் செயல்களே அவன் விதைக்கும் விதைகள்! மனிதன் விதைக்கும் பலவித விதைகள் பற்றியும் அதனால் அவர்கள் பெறும் அறுவடையை பற்றியும் வேதம் கூறுவது என்ன என்று பார்ப்போம்.
மாம்சத்துக்கென்று விதைக்கும் விதை:
இதை தங்கள் மனதும், மாம்சமும் விரும்புவதை செய்பவர்கள் இந்த விதையை விதைக்கிறார்கள். இந்த விதை தேவன் விரும்பாத மாம்சத்தின் கிரியைகளாக வெளிப்படும். இத்தகைய மனுஷர் அநியாயத்தை விதைக்கிறபடியால் வருத்தத்தை (சாபத்தை) அறுப்பார்கள். (நீதிமொழிகள் 22 8) நித்திய அழிவு அவர்களுடைய அறுவடையாக இருக்கும்.
ஆவிக்கென்று விதைக்கும் விதை:
கிறிஸ்துவினுடையவர்கள் இந்த விதையை விதைக்கிறார்கள். அவர்கள் ஆவியானவரால் நடத்தப்படுவார்கள். அவர்களின் கிரியையில் ஆவியின் கனி வெளிப்படும். இவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், பிறருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பயன்படும் விதைகளை விதைக்கிறார்கள், கிரியைகளைச் செய்கிறார்கள் இத்தகைய நீதியின் விதையை விதைப்பவர்கள் மெய்ப்பலனாகிய நித்தியஜீவனை தாங்களும் அடைந்து பிறரும் அடைய வழிவகுக்கிறார்கள்.
ஞான நன்மைகளான விதை:
சுவிசேஷகர்கள், விசுவாசிகள் விதைக்கும் சுவிசேஷ விதைகளையும், வேத வசன விதைகளையும் இது குறிக்கிறது. இத்தகைய விதை ஆத்தும அறுவடையை கொடுக்கிறது.1 கொரி. 9: 11)
தர்மசகாயமாகிய விதை:
2 கொரிந்தியர் 1:6-12 இது பரிசுத்தவான்களின் குறைவுகளை நீக்கும்படி செய்யப்படும் உபகாரங்களையும், ஏழைகளுக்கும் செய்யப்படும் தர்ம காரியங்களையும் குறிக்கிறது. இத்தகைய விதைகளை சிறுக விதைப்பவர்கள் நன்மைகளையும் சிறுக அறுப்பார்கள் பெருக விதைப்பவர்கள் நன்மைகளையும் பெருக அறுப்பார்கள். ஏழைகளுக்கு கொடுப்பவர்களின் நீதி என்றென்றைக்கும் நிற்பதும் அல்லாமல், அவர்களின் கையின் கிரியைகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும்.
பிரியமானவர்களே! நாம் எத்தகைய விதைகளை விதைக்கிறோம்? சிந்திப்போம்! ஏதாவது சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நல்ல விதைகளை விதைக்காமல் இருந்துவிடக் கூடாது. ஏனென்றால் காற்றைக் கவனிக்கிறவன் விதைக்க மாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான். (பிர.11:4) காலையிலேயே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; ... என்று வேதம் கூறுகிறது. காலை என்பது புத்துணர்ச்சியோடு நாம் இருக்கின்ற நேரம் மாலை என்பது களைப்போடும், சோர்வோடும் இருக்கின்ற நேரம். நம் சரீரமும் மனமும் எந்த நிலையில் இருந்தாலும் தேவன் விரும்பும் நல்ல விதைகளை விதைத்து விட வேண்டும் என்பதே மேற்கண்ட வசனத்தின் அர்த்தம். நல்ல கிரியைகள் ஆகிய விதைகளை சோர்ந்து போகாமலும், தளர்ந்து போகாமலும் விதைத்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். கர்த்தர் உதவி செய்வாராக.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு
ஒவ்வொரு மாநிலத்திலும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864