By Village Missionary Movement
Thursday, 01-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 01.02.2024
நடனம் மாத்திரம் அல்ல…
"…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" - மாற்கு 16:15
தேவன் தங்களை ஆசீர்வதிக்கும் போது தேவஜனங்கள் அதை நடனத்தோடு கொண்டாடியதை வேதாகமத்தில் பார்க்கிறோம். செங்கடல் பிரிந்து பெரிய விடுதலை உண்டானபோது மிரியாமும் உடனிருந்த பெண்களும் நடனத்தோடு ஆண்டவரை ஆராதித்தார்கள். உடன்படிக்கை பெட்டியை திரும்பி எருசலேமுக்கு கொண்டுவரும்போது தாவீது மகிழ்ச்சியின் நிறைவினால் தேவனை நடனத்தோடு துதித்தார். இப்படி உள்ளத்தின் நிறைவால் ஆண்டவரை நடனமாடி ஆராதிப்பது நல்லது. ஆனால் அதே நடனம் தேவனை மையமாக கொள்ளாமல் கேளிக்கையாக மாறும் அபாயம் உண்டு. வாலிபர் இருபாலரும் கூடியிருக்கும் கூடுகைகளில் இப்படிப்பட்ட நடனங்கள் இடறுவதற்கு ஏதுவாகலாம். சினிமாத்துறையில் உள்ள இசைக் கச்சேரி போல் இன்று சில ஆராதனைகள் உள்ளன. நம்முடைய ஆராதனை முறைகள் ஒருவருக்கும் இடறலாய் அமைந்து விடக்கூடாது.
பாபிலோன் ஆற்றங்கரையில் தங்கள் இசைக்கருவிகளை இசைக்க மனமில்லாமல் சோகம் நிறைந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு கூட்ட மக்களை சங்கீதம் 137 ல் சந்திக்கிறோம். தங்கள் பாவத்தின் விளைவாக பாபிலோனுக்கு சிறையிருப்பாக அனுப்பப்பட்ட இஸ்ரவேலர்களே இவர்கள். இன்றைய வேதபகுதியில் சிறையிருப்பில் உள்ள இம்மக்கள் மீண்டும் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்புவார்கள் என்று தீர்க்கதரிசனமாக ஆண்டவர் பேசுகிறார். தேவஜனங்கள் களிகூர்ந்து நடனமாடுவார்கள் என்று கூறுகிறார். நடனத்தோடு நின்று விடாமல் தேவனுடைய இந்த இரட்சிப்பை தூரத்திலுள்ள தீவுகளுக்கு அறிவிக்கும்படி எரேமியா 31:10 ல் கட்டளையிடுகிறார்.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது, ஆண்டவரை ஆராதிப்பது, நடனமாடுவது நல்லதுதான். ஆனால் இவைகள் சீஷத்துவத்தின் முடிவு கிடையாது. உலகெங்கும் சென்று இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை சொல்ல வேண்டும் என்கிற இராஜகட்டளை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாவத்தினால் உண்மையான மகிழ்ச்சியை இழந்து, வாழ்வின் நோக்கம் புரியாமல், வியாதிகளிலும், இன்னும் பலவித வேதனைகளிலும் வாழும் மனிதர்களுக்கு சுவிசேஷம் ஒன்றுதான் மாற்று மருந்து. இன்றைக்கு கிறிஸ்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வில் எங்கோ நின்று விட்டு "புறப்பட்டு போங்கள்" என்ற கட்டளையை மறந்து விட்டனர். சிலர் ஆராதனை, பாடல், நடனம் என்று புறப்பட்டு போகாமல் நின்று விட்டனர். இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் எவ்விடத்திலும் நின்று விடாமல் தேசம் சுவிசேஷமயமாக ஏதாவது செய்யுங்கள். முடிந்த இடங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவியுங்கள். முடியாத இடங்களில் அங்கு நடைபெறும் மிஷனெரி ஊழியங்களை ஜெபத்தினாலும், தியாக காணிக்கையினாலும் தாங்குங்கள். அல்லேலூயா !
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு
இந்த மாதம் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864