By Village Missionary Movement
Wednesday, 24-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 24.01.2024
வலியும் வலிமையும்
"…நீ… சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்…" - 1 சாமு. 30:8
வேதத்திலே அதிக வலியை அனுபவித்தவர் யோபு. சாத்தான் யோபுவின் வாழ்க்கையிலே உயர்ந்தபட்ச வேதனையைக் கொடுத்தான். "நிமிஷந்தோறும் சோதிப்பதற்கு நான் எம்மாத்திரம்" என்றார் யோபு. அந்த அளவுக்கு சோதனைகள் அடுக்கடுக்காக மாறிமாறி வந்து அவரைத் திகில் அடையச்செய்தது. வாழ்வின் அனைத்து வளங்களையும் இழந்து, அன்பான பிள்ளைகளையும் இழந்து, எஞ்சி நின்ற மனைவியால் காயப்பட்டு, ஆறுதல் சொல்ல வந்த சிநேகிதர்களாலும் நோகடிக்கப்பட்டார். உடம்பு இரணகளமாய் மாறிப்போனது. அது போதாதென்று அவர் மனதையும் நோகடித்தனர். சரீரத்திலும், மனதிலும் வலி என்பதை நூறு சதவீதம் அனுபவித்தார் யோபு. ஆனால் அவருக்குள் வலிமை இருந்தது. "தேவனே என் இரட்சிப்பு, அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். எனக்கு சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது" என்றார். இதுவே யோபுவின் வலிமை! "என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவரை என் சொந்த கண்களால் காண்பேன்" என்றார். இதுவே அவருக்குள்ளிருந்த விசுவாசத்தின் வலிமை! யோபுவை புரட்டிப் புரட்டிப் போட்டு வலியை உண்டாக்கின சாத்தான் அவரது வலிமையைக் கண்டு ஓடியே போனான். இரட்டைத்தனையான ஆஸ்தியுடன் இரட்டைத்தனையான ஆயுளுடன், பூரண புருஷனாய் யோபு வாழ்ந்தார்.
நீங்களும் உங்கள் மனதிலும் உடலிலும் அதிக வலியை தாங்கிக்கொண்டிருக்கிறீர்களோ? என்ன ஆகுமோ என்று கலங்கிக்கொண்டிருக்கிறீர்களோ? நான் இழந்த சந்தோஷம், சுகம் மீண்டும் வருமா? என்று ஏக்கத்தோடு இருக்கிறீர்களோ? கலங்காதீர்கள், "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். இழந்த எல்லாவற்றையும் நான் திருப்பிக்கொள்வேன்" என்று விசுவாசத்தில் வலிமையுள்ளவர் -களாகுங்கள். வலியைத் தாங்கின இருதயத்தில் நிச்சயம் வலிமையும் இருக்கும். அந்த வலிமையான விசுவாசத்தை யோபுவைப் போலத் தட்டி எழுப்புங்கள். உங்கள் வாழ்வை சோதிக்கும்படி வந்த பிசாசானவன் ஓடியே போவான்.
யோபுவைப் போல துவண்டிருக்கும் விசுவாசக் கூட்டத்தாரே! திடன்கொள்ளுங்கள். உலகில் இருப்பவனைக் காட்டிலும் உங்களுக்குள் இருப்பவர் பெரியவர். அவர் உங்கள் துக்கத்தையும், உபத்திரவத்தையும், கண்ணீரையும் அறிந்திருக்கிறார். இவற்றையெல்லாம் மாற்றுவது அவருக்கு இலேசான காரியம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்பி விசுவாசத்தோடு வீறுகொண்டெழும்ப வேண்டும். அவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் மாறாதவை. அவரது வார்த்தை ஒருபோதும் ஒழியாது. ஆம், யோபுவை இருமடங்காய் ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
- Mrs. மல்லிகா தயாளதாஸ்
ஜெபக்குறிப்பு:
24 மணி நேர சங்கிலித் தொடர் ஜெபம் எல்லா பணித்தளங்களிலும் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864