By Village Missionary Movement
Tuesday, 23-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 23.01.2024
நல்ல நிலத்தில் விழுந்த விதை
"அவன் தேவபக்தியுள்ளவனும்… தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான்" - அப். 10:2
விதையானது மிகச்சிறியதாக இருந்தாலும் விளைநிலங்களில் விதைக்கப்படும்போது அது முளைவிடத் தொடங்கி வளர ஆரம்பிக்கிறது. ஒரு விவசாயி தன் வயல்நிலங்களில் விதைகளை விதைக்கும்போது நல்ல மகசூலை எதிர்பார்த்து மகிழ்ச்சியோடு விதைப்பான். பயிர்கள் வளரும் போது நன்றாக தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, களைகளையெல்லாம் அப்புறப்படுத்தி பயிரின் வளர்ச்சியைப் பார்த்து மிகவும் பூரிப்பான். விதைகள் வளராமல் காய்ந்து போனாலோ, வளர்ந்து சரியான அறுவடை இல்லாமல் போனாலோ விவசாயி துவண்டு போவான்.
வேதத்திலும், விதைக்கிறவனைப் பற்றிய உவமையை இயேசுகிறிஸ்து கூறி மக்களுக்குப் போதித்தார். மாற்கு 4ம் அதிகாரம் 3 முதல் 8 வரையுள்ள வசனங்களில் விதைக்கிறவனைப் பற்றியும், விதை மற்றும் விளைநிலங்களைப் பற்றியும் நாம் காணலாம். வழியருகே விழுந்த விதை, கற்பாறையின்மேல் விழுந்த விதை, முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை, நல்ல நிலத்தில் விழுந்த விதை என லூக்கா 8:11 குறிப்பிடுகிறது. விதைப்பவன் உழவன், அல்லது விவசாயி. இது வசனங்களை மக்களிடம் விதைக்கும் ஊழியர்களையே குறிக்கிறது. கிறிஸ்துவின் போதனையால் இந்த நான்கு வகை நிலத்தில் விளைந்து பலன் கொடுக்கிற மக்களை வேதாகமம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நல்ல நிலமாக உள்ள அநேகர் பலன் கொடுக்கின்றனர். அப்படிப்பட்டவர்தான் கொர்நேலியு! எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் திறந்த உள்ளத்துடன், உண்மையாக தெய்வபக்தியுடன் தம்மைத் தேடுகிற எவரையும் தேவன் சந்திக்கிறார் என்பதற்கு கொர்நேலியு ஓர் எடுத்துக்காட்டு. தேவபக்தி உள்ளவர், தேவனுக்குப் பயந்து, தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்தவர். எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தவர். தேவனுக்கு கீழ்ப்படிந்த கொர்நேலியு தன் குடும்பத்தார் யாவரும் தேவசெய்தியைக் கேட்க வேண்டும் என்று யாவரையும் கூட்டிச் சேர்த்து தேவனுக்குப் பயப்படும் பயத்தில் வழிநடத்தினவர். தான் ஒரு அதிகாரியாக இருந்த போதும் தேவமனிதனுக்கு மரியாதை செலுத்தி தாழ்மையுடன் காணப்பட்டார். யூதரல்லாத ரோமராகிய இவரும், இவர் வீட்டாரும் பரிசுத்த ஆவியைப் பெற்று உடனடியாக திருமுழுக்கையும் பெற்றனர். இவர் நல்ல நிலத்தில் விழுந்த விதையானதால் கர்த்தருக்கு சாட்சியாக திகழ்ந்தார்.
எனக்கன்பானவர்களே, நாம் எந்த நிலத்தில் விழுந்த விதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்றே சீர்தூக்கி பார்ப்போம். நம்மால் நமக்குரியவைகளால் பிறருக்குப் பயனுண்டா? நம்மால் பிறருக்கு பயன்தரும் வகையில் தேவனுக்கென நல்ல மகசூலை இப்புதிய ஆண்டிலே தரப் பிரயாசப்படுவோம். தேவகிருபை நம்மோடிருப்பதாக! ஆமென்!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு
மாதத்தில் 30 நாட்களும் 30 வீடுகளில் வீட்டு ஜெபக்கூட்டங்கள் நமது பணித்தளங்களில் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864