By Village Missionary Movement
Thursday, 18-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 18.01.2024
சாதாரண விதை
"உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்" - பிரசங்கி 11:1
1850 ஜனவரி 6 -ம் தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. பனிப்புயலில் சிக்கிய ஒரு வாலிபன் தன்னைக் காத்துக் கொள்ள அருகிலிருந்த சபைக்கு ஓடினான். ஞாயிறு மாலை நேர ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சபை போதகர் இல்லை. சபை விசுவாசியான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்திக் கொண்டிருந்தார். அவர் தேவசெய்தியை ஆரம்பித்தார். திரும்ப திரும்ப வற்புறுத்தி சொன்ன காரியம், "என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்" என்பதே. பனிப்புயலுக்கு தப்பி ஓடி வந்த வாலிபன் கதவுக்கு பின்புறமாக செய்தியை கேட்க எந்த விருப்பமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான். தையல்காரர் பிரசங்கபீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி வாலிபனே இயேசுவை நோக்கிப் பார் என்று கூறினார். அவர் படித்தவருமல்ல, பிரசங்கியாருமல்ல மிகச் சாதாரண மனிதர்தான். ஆனால் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் வல்லமையோடு அசாதாரணமாக பிரசங்கித்தார். அநேகர் இருந்த இடத்தில் குறிப்பாய் தன்னை பார்த்து சொன்ன இந்த வார்த்தைகள் அந்த வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை நோக்கிப் பார் என்ற வேத வசன விதை அவனுடைய இருதயத்தில் தொனித்துக் கொண்டே இருந்ததுமல்லாமல், அவனுக்குள் கிரியை செய்யவும் தொடங்கியது. முடிவில் இயேசுவை நோக்கினான் அந்த வாலிபன். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமா? அவர்தான் C.H.ஸ்பர்ஜன். பிரசங்க ஊழியத்தில் மிகவும் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டு புகழ் பெற்று விளங்கினார்.
இவ்வுலகத்தில் வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவித்த சாலமோன் சொல்கிறார். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் என்று! ஆகாரம் என்பது விதை! விதையை தண்ணீர்கள் உள்ள பகுதியில் போட்டோம் என்றால் அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனை நாம் காண முடியும். தண்ணீர்கள் உள்ள பகுதிகளில் விதைத்தால் மட்டுமே அதின் பலனைக் நாம் பெற முடியும். மாறாக தண்ணீர் இல்லாத வறட்சி பகுதிகளில் நாம் விதைத்தோமென்றால் பலனைக் காண முடியாது.
பிரியமானவர்களே, தையல்காரர் மூலமாக விதைக்கப்பட்ட சாதாரணமான விதை மிகப் பெரிய பலனைக் கொடுத்தது. சந்தேகப்படாமல் விதையை விதைத்தார். கர்த்தரோ விளையச் செய்தார். இவ்வுலகில் விதைக்கப்பட வேண்டிய பகுதி அநேகமாக உள்ளது. ஆனால் விதைப்பதற்கு ஆட்களே இல்லை. அவருடைய வசனத்திற்கு தீவுகள் காத்திருக்கிறது. இப்படிப்பட்ட பகுதிகளுக்கு யார் உத்திரவாதி என்றால் நீங்களும் நானும்தான். இயேசு என்கிற விதையை விதைப்போம்! நிச்சயம் அதின்பலனை இங்கு காணமுடியாவிட்டாலும் பரலோகத்தில் ஒருநாள் காண்போம்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியத்தில் இணைந்து செயல்படும் ஊழியர்களின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864