By Village Missionary Movement
Monday, 15-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 15.01.2024
சிறிய விதைகள்
"விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்" - மாற்கு 4:14
ஆலவிதை சகல விதைகளிலும் சிறிதாயிருந்தாலும் அது முளைத்து பெரிய ஆலமரமாகிறது. அதைப் போன்று வேதாகமத்தில் சிலர் செய்த சிறிய காரியங்கள் பெரிய எழுப்புதலையும், இரட்சிப்பையும், விடுதலையையும் கொண்டு வந்ததை இன்று காண்போம்.
1) சீரியர், சமாரியாவை முற்றுகையிட்டு கொடிய பஞ்சம் நிலவியது. தேவன் கிரியை நடப்பித்ததால், எதிரிப்படை சமாரியாவை விட்டு ஓடியது. அவர்கள் சீரியரின் பாளையத்திற்குள் நுழைந்த நான்கு குஷ்டரோகிகள் கூடாரங்களிலிருந்து உணவு, உடைமைகளை எடுத்து பசியாற்றினார். இந்த நற்செய்தியை அரண்மனையாருக்கு அறிவிக்க தாமதிப்பது குற்றம் என உணர்ந்து, துரிதமாக அந்த நற்செய்தியை அரண்மனையாருக்கு அறிவித்தார்கள். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை. (2இராஜா. 7:1-16)
2) ஆகாப் ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியா, தன் உயிருக்கு ஆபத்து என்றாலும் ஆகாபையும், எலியாவையும் சந்திக்க வைத்தான். விளைவு கர்மேல் பர்வதத்தில் இஸ்ரவேலர் நடுவில் பெரிய எழுப்புதல் ஏற்பட்டது. (1இராஜா 18:1-39)
3) பவுலும் மற்ற கைதிகளும் இத்தாலியா தேசத்திற்கு பயணம் செய்த கப்பல் சேதப்பட்டு போகும் சூழ்நிலையில் பவுல் தேவ வார்த்தைகளைச் சொல்லி கப்பலிலிருந்த 276 பேரையும் திடப்படுத்தி தப்பிப் பிழைப்பதற்கு பட்டினியாயிருந்த அவர்கள் போஜனம் பண்ணி திடமடைய வேண்டும் என்று சொல்லி தானும் புசித்து அனைவரையும் உற்சாகப்படுத்தி போஜனம் பண்ண வைத்தான். முடிவு, எல்லோரும் தப்பி மெலித்தா தீவினை அடைந்தார்கள். அத்தீவிற்கு சுவிசேஷம் சென்றது.
பிரியமானவர்களே! என்னால் ஆண்டவருக்கு என்ன செய்ய முடியும் என்ற தாழ்வு மனப்பான்மையோடு இராமல் நான்கு குஷ்ட ரோகிகளைப் போல இயேசு நமக்கு அளித்த விடுதலையை நம் தேசத்தார்க்கு நற்செய்தியாக அறிவிக்கலாமே. ஒபதியாவை போல ஓர் இடத்தில் பலத்த எழுப்புதல் ஏற்பட ஓர் ஊழியக்காரரை பயன்படுத்தலாமே. பிழைப்போம் என்ற நம்பிக்கையற்ற நிலையில் இருப்போரை தேவ வார்த்தைகளால் தைரியப்படுத்தி அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யும்படி உற்சாகப்படுத்தலாமே! மேற்கண்ட நபர்களைப் போல கண்ணீர் ஜெபத்தோடு, ஏதாவது ஒரு சிறிய காரியத்தின் மூலம் வேதவசனங்களை விதைத்தால் அறுப்புக்கு எஜமானாகிய பெரிய ஆண்டவர் பெரிய அறுவடையைக் கட்டளையிடுவார்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய ஸ்கூலுக்காக, அதனுடைய ஆயத்தப்பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864