By Village Missionary Movement
Saturday, 13-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 13.01.2024
நித்தியத்திற்கான விதை
"…ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்" - கலாத்தியர் 6:8
ரீட்டாவும், ஷீலாவும் ஒரே சபைக்குச் செல்லும் பக்தியுள்ள விசுவாசிகள். அவர்கள் இருவர் வீட்டிலும் கமலா என்ற விதவைத்தாய் வீட்டு வேலை செய்ய வருவார்கள். தன் கணவன் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் கமலா. இதை கேள்விப்பட்ட ரீட்டா ஒரே ஒரு முறை அவளுக்கு பணம் கொடுத்து உதவினாள். ஒவ்வொரு மாதமும் அதையே பழக்கமாக்கிக் கொள்வாள் என்று ஞானமாய் செயல்படுவதாக எண்ணி அதன்பிறகு உதவவில்லை. ஆனால் ஷீலாவோ தன்னால் இயன்றதைக் கொடுத்து உதவினாள். இவர்கள் இருவரில் யார் நித்தியத்திற்கு என்று விதைத்தவர்கள்?
இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் தலைவன் ஒருவன் அவரை நோக்கி நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு சில காரியங்களைச் சொன்ன பின்பு மேலும் இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார்.
மேலும் வேதத்தில் மாம்சத்திற்கென்று விதைப்பது இந்த உலக வாழ்க்கையில் நமக்கு மேன்மையை, உயர்வை கொண்டு வருவதாக இருந்தாலும் அதின் அறுவடை அழிவுதான். ஆனால் நாம் ஆவிக்கென்று விதைக்கும் போது நாம் இந்த உலக வாழ்க்கையை முடித்த பிறகு நித்திய ஜீவனை அறுவடை செய்யலாம்.
பிரியமானவர்களே, மேற்கண்ட சம்பவங்கள் சொல்வது போல நம்மிடம் இருக்கும் வறியோர், தரித்திரருக்கு உதவுவது நித்தியத்திலே நாம் விதைப்பதற்கு சமம். இது இவ்வுலகத்திற்கு தெரியாவிட்டாலும் நிச்சயம் இதை பரலோகம் அறிந்திருக்கும். நாம் இந்த உலகில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்காவிட்டாலும் பரலோகத்தில் சேர்த்து வைப்போம் என்றால் அது நித்தியமானது, நிரந்தரமானது. நம் கிறிஸ்தவத்தின் நோக்கமே எப்படியாவது நாம் அந்த நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே. அப். பவுல் அடிகளார் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே நாம் நித்தியத்திற்குரிய விதைகளை விதைப்போம். நாம் இங்கு விதைக்கின்ற விதைகளின் விளைச்சலை நித்தியத்தில் நிச்சயம் ஒரு நாள் காண்போம். ஏன் என்றால் விதையை விளைவிக்கச் செய்கின்றவர் இயேசுவானவர்.
- Mrs. சினில்டா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
இன்று நடைபெற்று கொண்டிருக்கும் சீஷத்துவ முகாமில் பங்கு பெறும் வாலிபர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய கரத்தில் கருவியாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864