By Village Missionary Movement
Saturday, 03-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 03-04-2021
மூன்றே வார்த்தை
“மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;…” – வெளி. 1:18
1943-ம் வருடம், ரஷ்ய தேசத்தை சர்வாதிகாரியான ஹிட்லர் முற்றுகையிட்டு, அதன் பெரும் பகுதியை பிடித்தார். ரஷ்ய அரசால் ஹிட்லர் படையை எதிர்த்து நிற்க முடியவில்லை. இந்த நேரத்தில் ஈஸ்டர் வந்தது. கம்யூனிஸ்ட் தேசமான ரஷ்யா ஏற்கனவே எல்லா ஆலயங்களையும் தகர்த்து மூடியிருந்தாலும் ஒரே ஒரு ஆலயம் மட்டும் திறந்திருந்தது. அதில் நிரம்பி வழிந்த ஜனக்கூட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதன் போதகர் உற்சாகமாய் பிரசங்கித்தார். விசுவாசிகளிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆனால் அதிகாலை நேரமே அவர் கைது செய்யப்பட்டார். அவர் அழைத்துச் செல்லப்படும் முன் மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டும் பேசும்படி அனுமதி கேட்டார். “சரியாக மூன்று வார்த்தைகள் மட்டுமே” என்று அதிகாரத்தோரணையில் கடினமான குரலோடு அனுமதி கொடுத்தார் அதிகாரி. அவர் பேசிய மூன்று வார்த்தைகள் என்ன தெரியுமா? “இயேசு உயிரோடிருக்கிறார், அல்லேலூயா” அவர் சொல்லி முடித்ததும் சபையார், பொது மக்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை மீண்டும் சத்தமாய் சொன்னார்கள். அவர்கள் விசுவாசம் பலப்பட்டது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வந்து 33 ½ வருடம் வாழ்ந்தார். அதில் 3 ½ வருடம் ஊழியம் செய்து, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். அவரோடுகூட இருந்த சீஷர்கள் இயேசு மரித்துவிட்டார் இனி நாம் என்ன செய்வது என்று பயந்தார்கள். இயேசுவைப் போல நம்மையும் கொன்று விடுவார்களோ என நினைத்து ஒரு பூட்டிய அறையினுள் இருந்தார்கள். இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பயப்படாதேயுங்கள் என்று கூறுகிறார். பின்பு 40 நாளளவும் உயிருள்ளவராக தன்னை அநேகருக்கு வெளிப்படுத்தினார். பரத்துக்கு ஏறி செல்லுமுன் உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று கூறிய இயேசு இன்றைக்கும் உயிருள்ளவராக நமக்குள் இருக்கிறார். நம்மோடு வாசம் செய்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களுடைய வாழ்க்கையிலுள்ள பிரச்சனைகளை நினைத்து கவலைப்பட்டு பயந்து கொண்டிருக்கிறீர்களோ? எல்லோராலும் கைவிடப்பட்டு இனி யார் எனக்கு உதவி செய்ய முடியும் என யோசிக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். அவர் ஒரு புதிய துவக்கத்தை உங்கள் வாழ்வில் தர வல்லவர், காரணம் அவர் உயிரோடிருக்கிறார். உயிருள்ள இயேசுவிடம் உங்கள் வாழ்க்கையில் காரியங்களையெல்லாம் சொல்லி விடுதலையை பெற்றுக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். ஆமென்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
முழுநேர மிஷனெரிகளின் சரீர சுகம், தேவ பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250