By Village Missionary Movement
Tuesday, 26-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 26.12.2023
மன்னிப்பு
"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்" - மத்தேயு 6:14
ஒடிசாவில் தொழுநோயாளிகளுக்கு தொண்டு செய்து வந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவருடைய இரு சின்னஞ்சிறு பிள்ளைகளும் தீயில் உயிருடன் கொளுத்தப்பட்டு எரிந்து கருகினர். முழு உலகமே அன்றைய நாளில் இவர்களைக் கொன்ற மனிதர்கள் மீது ஆத்திரமும், கோபமும் கொண்டது. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. நீதிக்காக பலர் போராடினர். அதேநேரம் மிஷனெரி கிரகாமின் மனைவி கிளாடிஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் கணவரையும், பிள்ளைகளையும் பரலோகில் நிச்சயம் காண்பேன். தீங்கிழைத்தவரை நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பேதுரு இயேசுவினிடத்தில், "ஆண்டவரே! என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ்செய்து வந்தால் நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுதரம் மட்டுமோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு ஏழுதரம் மாத்திரமல்ல ஏழெழுபது தரம் என்று உனக்கு சொல்லுகிறேன் என்றார். எனவே குற்றம் செய்தவனைச் சரியாக 490 முறை மன்னிக்க வேண்டுமென்றும் 491 வது முறையோ அந்த நபர் பகைக்கப்படலாம் என்றும் இயேசு கூறவில்லை. எழுபது என்பது நம்முடைய ஜீவியகாலம் முழுவதையும் குறிக்கிறது. ஆகையால் நமக்கு விரோதமாய் தீங்கு செய்பவர்களை நம்முடைய ஜீவியகாலம் முடியும் வரை மன்னித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து சொன்ன ஆலோசனை எத்தனை ஆச்சரியமானது பாருங்கள்!
பிரியமானவர்களே, நாம் இயேசுவுக்கு விரோதமாய் எவ்வளவு பாவமான காரியங்களை செய்திருப்போம். அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டது போல, பிறரை நாமும் மன்னித்து ஏற்றுக் கொள்ளுவோம். மன்னித்தலோடு மாத்திரமல்ல அவற்றையெல்லாம் மறந்து மீண்டும் ஐக்கியப்பட பிரயாசப்படுவோம். இதுவே கிறிஸ்துவின் அன்பு! நம்மை இயேசுவானவர் முழுமையாய் மன்னித்து விட்டார். ஒரு வேளை இயேசு கிறிஸ்து நான் உன்னை மன்னித்தது விட்டேன். ஆனால் நீ என்னிடத்தில் நெருங்கி வராதே நானும் உன் அருகில் வரமாட்டேன் என்று சொல்வாரானால் நம்முடைய நிலை என்னவாகும்? சிந்திப்போம்! நாம் பிறரை முழுமையாக மன்னித்து விட்டால் மீண்டும் அவருடன் ஐக்கியப்படுவது இலகுவாகும், பரலோக சந்தோஷம் இங்கேயே நமக்கு கிடைத்துவிடும். அதே நேரம் பரலோக தேவனிடத்தில் நாமும் கிட்டிச் சேர்வோம். நம்முடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கின்றனவா? நம்மை நாமே ஆராய்வோம்!
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
முழுநேர ஊழியர்களுக்காக வெளியிடப்படும் கழுதைகள் கையேடு பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864