By Village Missionary Movement
Saturday, 23-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 23.12.2023
நம்பிக்கை நட்சத்திரம்
"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" - யோவான் 1:9
பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டிற்கும் இடையேயுள்ள ஏறக்குறைய 400 ஆண்டுகள் "அமைதி ஆண்டுகள்" என்று கூறப்படுகிறது. இந்த இருண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மனுகுலத்திற்கு ஒளியாக வந்த இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வரலாறு தொடங்குகிறது. இன்றைய நாளில் கிறிஸ்துவின் பிறப்பை அறிந்தவர்கள் என்ன செய்தார்கள என்பதை வேதத்திலிருந்து சற்று நேரம் தியானிப்போம்.
ஏரோது ராஜா: இயேசுவின் பிறப்பின் செய்தியைக் கேட்டவுடன் கலங்கினான். தனக்கு போட்டியாய் வந்து பிறந்திருக்கிற ராஜா என்று தவறாய் விளங்கிக் கொண்டான். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு பயத்தைத் தரக்கூடியது அல்ல. மாறாக பயத்தை நீக்கக் கூடியது. இந்த செய்தி எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் "நற்செய்தி" என்பதையும், அவர்தான் இந்த உலகின் இரட்சகர் என்பதையும் உணராதவனாய் செயல்பட்டான்.
சாஸ்திரிகள்: சாஸ்திரிகளின் பிரயாணத்தை ஒரு "விசுவாசப் பயணத்திற்கு" ஒப்பிடலாம். அவர்களுக்கு தெளிவான நோக்கம் இருந்தது. "ராஜாதிராஜாவைப் பணிந்து கொள்ள வேண்டும்" என்பதே அந்த நோக்கம். அதோடு இணைந்த இலக்கும் இருந்தது. அந்த இலக்கு கிறிஸ்துவே! அவர்கள் தேடினார்கள், கண்டுபிடித்தார்கள், வணங்கினார்கள், கொடுத்தார்கள. நம்முடைய விசுவாச வாழ்விலும் நோக்கம், இலக்கு, மனஉறுதி, தாழ்மை இருக்கிறதா? இந்த உலகப் பயணம் நம்மை ராஜாதி ராஜாவண்டை கொண்டு செல்கிறதா? நம்பிக்கையோடு முன்னேறுகிறோமா?
நட்சத்திரம்: சாஸ்திரிகளை வழிநடத்தி வந்த நட்சத்திரத்தை "சுவிசேஷகனுக்கு" நாம் ஒப்பிடலாம். இந்த நட்சத்திரம் சீராக, சரியான இடத்திற்கு அவர்களை கொண்டு சென்றது. இருளான உலகிற்கு ஒளியாக வந்த மேசியாவை அவர்கள் கண்டுகொள்ள பயன்பட்டது.
பிரதான ஆசாரியர் மற்றும் வேத பாரகர்: இவர்கள் கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி சரியான விபரத்தைக் கொடுத்தார்கள். ஆனால் எருசலேமிற்கு அருகில் இருந்த பெத்லகேமிற்கு போய் குழந்தையைக் காண வேண்டும் என்ற எண்ணமில்லை. நாமும் கூட பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஜீவ வார்த்தைகளை அறிந்தவர்களாய், கேட்கிறவர்களாய் மட்டும் இருந்தால் பிரயோஜனமில்லை. அவைகளின் படி நடக்க பிரயாசப்படாவிட்டால் அது நம் வாழ்வில் எந்தவொரு ஆசீர்வாதத்தையும் கொடுக்க முடியாது.
ஆம், பிரியமானவர்களே! கலக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறவர்களாய், விசுவாச ஓட்டத்தில் மன உறுதியோடு வாழ இன்று நம்மை அர்ப்பணிப்போம்!
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் காலங்களில் சந்திக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864