By Village Missionary Movement
Friday, 15-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 15.12.2023
பூமியிலே சமாதானம்
"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்" - லூக்கா 2:14
மற்றொரு கிறிஸ்துமஸ் காலம் வந்து விட்டது. கிறிஸ்துமஸ் கீதங்களை பக்தியோடு உணர்ந்தோ அல்லது எந்த உணர்வும் இல்லாதவர்களாகவோ பாடலாம். இயேசுவிற்கு சத்திரத்தில் இடமில்லாமற்போனது போல, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களினால் இயேசுவுக்கு நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும், இடமில்லாமற் போகலாம்; அல்லது இயேசு பிறந்த மாட்டுக் கொட்டிலாக நம் உள்ளம் இருந்து தேவன் இம்மானுவேலாக என்றும் நம்மோடிருக்கப் பிறந்திருக்கிறார் என்ற விசுவாசத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம். சிலர் புறமார்க்கத்தாரைப் போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களோடு மாத்திரம் அர்த்தமற்ற கிறிஸ்துமஸ் கொண்டாடலாம். சிலர் பாடுகள், இழப்புகளினால் கிறிஸ்துமஸ் நாளில் துக்கத்தோடு இருக்கலாம்.
காரியங்கள் இவ்வாறு இருக்க, இந்நாட்களில் எங்கும் இதுவரை கண்டிராத தீவிரவாதங்கள், வன்முறைகள், கொலைகள், விவாகரத்துகள், யுத்தங்கள், விபத்துகள், இயற்கைச்சீற்றங்கள் என எங்கும் கண்ணீர், சமாதானமின்மை, எதிலும் நிச்சயமில்லாமை, எங்கும் திகில்கள்! மனுக்குலம் சமாதானத்தைத் தேடி அலைகிறது. இத்தகைய சூழ்நிலையில் சமாதான பிரபுவாக அவதரித்த இயேசுவின் பிறப்பை நாம் எவ்வாறு கொண்டாட தேவன் விரும்புகிறார் என்று பார்ப்போம்!
மனுக்குலத்தின் பாவங்களுக்காக, தன் விலையேறப் பெற்ற இரத்தத்தைச் சிந்தி, தேவனுக்கும் மனிதருக்குமிடையே சமாதானத்தை உண்டாக்கவே இயேசு மனிதரானார் என்பதுதான் முதல் கிறிஸ்துமஸ் செய்தி. (கொலோசெயர் 1:20) அவரே நம்முடைய சமாதானக் காரணர். (எபேசியர் 2:14) இந்த சமாதானத்தை நாமும், பூமியிலுள்ள எல்லோரும் பெற்று மோட்ச பாக்கியம் அடைய வேண்டும் என்ற தேவனது நல்லெண்ணம்தான் அவர் மனுஷர் மேல் கொண்டுள்ள பிரியம். இந்த சமாதானத்தைப் பெற்றவர்கள்தான் மெய் கிறிஸ்தவர்கள். அவர்கள் மாத்திரமே இந்த சமாதானமற்ற உலகில் எங்கும், எவ்வேளையிலும் சமாதானமாக இருக்க முடியும். இதுவே அழுத்தமான நற்செய்தி. நீங்கள் மெய் கிறிஸ்தவரா? உங்கள் பதில் "இல்லை" என்றோ "சந்தேகம்" என்றோ இருந்தால் இப்பொழுதே அச்சமாதானத்தைப் பெற்றுக் கொண்டு கிறிஸ்துமஸ்க்கு ஆயத்தப்படுங்கள். அப்படியானால் முதல் கிறிஸ்துமஸ் தினத்தில் தூதர் சேனை துதித்தபடி உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகும். ஆமென்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் தங்கியிருக்கும் பயிற்சியில் உள்ள மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864