By Village Missionary Movement
Tuesday, 12-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 13.12.2023
அதிசயமானவர்
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; . . அவர் நாமம் அதிசயமானவர்,…" - ஏசாயா 9:6
அப்போஸ்தலனாகிய பவுல் "கிறிஸ்து நம்மில் உருவாக வேண்டும்" என்று கூறுகிறார். கிறிஸ்து நம்மில் உருவான அந்த நாள் முதல், நம் உள்ளம் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியைஅனுபவிக்கிறது. இப்படி நம் வாழ்க்கையில் பிரவேசித்த அந்த அதிசயமானவரின் அற்புத செயல்களை அனுதினமும் அனுபவித்து அகமகிழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. அப்படி அதிசயமானவராய் ஆண்டவர் டி.எல். மூடி என்ற தேவமனிதனின் வாழ்வில் இடைபட்ட ஒரு நிகழ்வை காண்போம்.
ஒருமுறை இவருக்கு பணத் தேவை அதிகமாக இருந்தது. ஊழியத்தின் தேவைகள், தன் குடும்பத்தின் தேவைகள் மத்தியில், தவணை முறையில் வாங்கி இருந்த காருக்கு 14 டாலர்களை கட்ட வேண்டியதாயிருந்தது. 14 டாலர் கட்டாவிட்டால் கார் பறி போய் விடும். நாளைக்குள் 14 டாலர் தேவை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயேசுவிடம் இவ்விதமாக ஜெபித்தாராம், "ஆண்டவரே, நீர் உம்மை சோதித்துப் பார்க்கச் சொன்னீர், வானத்தின் பலகணிகளைத் திறந்து என் தேவையை சந்தியும்" என்று ஜெபித்து விட்டு கர்த்தர் பார்த்துக் கொள்வார், அதிசயம் செய்வார் என்கிற விசுவாசத்தோடு படுக்கச் சென்றுவிட்டார். என்ன ஆச்சரியம் அதிகாலையில் எழுந்த போது தன் வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே பணங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார். என்ன ஆச்சரியம்! காருக்கு கட்ட வேண்டிய தொகையான 14 டாலர்கள் சரியாக இருந்தது. ஆம், தேவன் அதிசயமானவர்! அவரை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் தேவையான நேரத்தில், நமது விசுவாசத்தின்படி அதிசயங்களைச் செய்வார். இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
வேதத்தில் தேவன் செய்த அதிசயமான காரியங்களை சொல்லி முடியாது. சாறிபாத் விதவையின் வாழ்வில் பஞ்சகாலம் முழுவதும், எண்ணெய்யும் மாவும் குறையாத அற்புதம். கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றி அற்புதம்! 5 மீன் 2 அப்பம் கொண்டு 5000 பேரை போஷித்த அதிசயம்! ஒரு முறை ஏழை விதவையின் மரித்துப் போன வாலிப மகனின் பாடையைத் தொட்டு உயிர் பெறச் செய்த அதிசயம்!
அன்பானவர்களே! நம் தேவன் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்கிறவர்! அவர் நாமம் அதிசயமானவர்! இன்றும் ஏதோ ஒரு அற்புதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களோ? அவர் அதிசயமானவர் என்பதை விசுவாசியுங்கள். நிச்சயம் அவர் உங்கள் வாழ்வில் செய்யும் அதிசயத்தைக் காண்பீர்கள்.
- Bro. சாம் மோரீஸ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம் மூலம் பயனடையும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864