By Village Missionary Movement
Tuesday, 12-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 12.12.2023
மெய்யான ஒளி
"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" - யோவான் 1:9
பரிசுத்த வேதாகமத்தில், பிசாசுகள் பிடித்து தன்னைத் தானே சேதப்படுத்திக் கொண்டு ஒருவராலும் அடக்க முடியாதவனாய் கல்லறையில் வாழ்ந்த ஒரு மனிதன் இருந்தான். இயேசு ஒருநாள் அந்த வழியாக சென்றார். பிசாசுகளை அவனை விட்டு நீக்கினார். அவன் புத்தி தெளிந்து வஸ்திரம் தரித்து, உட்கார்ந்தான். பிற்பாடு அநேகர் ஆண்டவருக்குள் வருவதற்கு காரணமாக அந்தக் கல்லறை மனிதனை மாற்றினார் நம் கர்த்தர்.
பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவயதிலே ஞாயிறுபள்ளி மற்றும் ஆலய ஆராதனைக்கு பெரும்பாலும் தவறாது செல்வான். ஜெபம், வேதவசனம் படித்தல், பெற்றோருக்கு கீழ்ப்படிதல் என நல்ல பிள்ளையாக வளர்ந்து வந்தான். ஆனால் வளர வளர அவன் ஆண்டவரிடமிருந்து படிப்படியாக பிரிந்தான். நண்பர்களுடன் சேர்ந்து தன் இஷ்டப்படி வாழ்ந்தான். வீட்டாருக்கும் உற்றார் உறவினருக்கும் அவனைக் குறித்து ஒரே கலக்கம். பிசாசின் குணங்கள் அநேகம் அவனுக்குள் இருந்தன. உண்மையில் கிறிஸ்துவுக்குத் துரோகியானான். ஆனால் பெயருக்கு கிறிஸ்தவன். இப்படி அவன் வாழ்கின்ற காலத்தில் கையில் ஒரு கட்டி ஏற்படவே அது கேன்சராக இருந்தாலும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூற இவனுக்கு ஒரே பயம். எப்படியாவது சரியாக வேண்டும் என்று எண்ணி, எல்லாருக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்துவை நம்பி தன் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிட்டான். "இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" என்ற வேத வார்த்தையின்படி அவன் பாவங்களை மட்டுமல்ல, வியாதியையும் அவனை விட்டு கர்த்தர் நீக்கினார். இன்று அநேக இடங்களுக்கு சென்று அவருக்காக ஊழியம் செய்யும்படி தெரிந்தெடுத்திருக்கிறார். அவர் நாமம் மகிமைக்காகப் பயன்படுத்துகிறார். இன்று இதை எழுதவும் உதவி செய்திருக்கிறார்.
ஆம், பாவத்தில், அக்கிரமத்தில், வியாதியின்பிடியில் இருந்த என்னை விடுதலையாக்கி பிரகாசிப்பித்த தெய்வம் இதை வாசிக்கிற, கேட்கிற உங்களையும் பிரகாசிப்பார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாட்களைக் கொண்டாடுகிற இந்த காலங்களில் உங்கள் உள்ளத்தில் இயேசு கிறிஸ்து பிறக்க உண்மையாய் இடங்கொடுங்கள். வேதவசனத்தின்படி வாழ அர்ப்பணியுங்கள். எவ்வளவு இருளான வாழ்க்கையையும் பிரகாசமாக மாற்றுகிற அந்த மெய்யான ஒளி உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆமென்!
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் டியூசன் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864