By Village Missionary Movement
Friday, 01-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 01.12.2023
கதை ரெடி
"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;…" - எரேமியா 1:5
ஒரு சினிமா படம் எடுக்க முதலாவது இயக்குனர் ஆயத்தம் செய்வது கதை. பின்பு தான் கதாநாயன், மியூசிக், பாடலாசிரியர் என யார் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிப்பார். அதே போல நம்மைப் படைத்த இயக்குனர் ஆகிய தேவன் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்னே நம் வாழ்விற்கான முழுத் திட்டத்தையும் ஆயத்தம் செய்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், "உன்னைத் தாயின் கருவில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டேன்" என்கிறார். மேலும், "நம் அவயவங்கள் உருவேற்படும் நாட்களையும் குறித்து வைத்திருக்கிறார்".
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் எதுவும் ஏதோ தற்செயலாய் அல்லது விபத்தாக திடீரென்று நடப்பதில்லை. எல்லாம் தேவனால் முன் குறிக்கப்பட்டுள்ளதே! நம் வீடு, தாய், தகப்பன், உடன் பிறந்தவர்கள் எல்லாம் அவர் திட்டப்படியே நமக்குக் கொடுக்கப்பட்டது. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் நம் தேவன்; ஏனெனில் குறைவை விரும்பாதவர்! மேலும் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர், நம் வாழ்வின் அனைத்துக் காரியங்களையும் திட்டம் பண்ணி அனுப்பியுள்ளார். நம் காலங்கள் அவர் கரத்திலுள்ளது. ஆகவே வழி தவறி போகவோ, பிசகவோ வாய்ப்பில்லை. ஏன் இயேசு கிறிஸ்துவே தேவதிட்டத்தின்படி தான் வந்தார். அவர் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாம் வேதவாக்கியம் நிறைவேறும்படியாய் நடந்தது எனப் பார்க்கிறோம். பரிசுத்த ஆவியினால் கன்னி வயிற்றில் உருவாவது, பெத்லகேமில் பிறப்பது, இரண்டு வயதிற்குட்பட்ட ஆண்பிள்ளைகள் கொல்லப்படுவது, நாசரேத் செல்லுவது, ஞானஸ்நானம் பெறுவது என எல்லாமே பிதாவாகிய தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் உரைத்திருந்தார். ஆதலால் இயேசுகிறிஸ்து பிதாவானவரோடு உறவாடி ஒவ்வொரு நாளுக்கான திட்டத்தையும் பெற்று அதை அப்படியே செய்தார். ஏன் சிலுவையில் தொங்கும் போது கூட வேதவாக்கியம் நிறைவேற தாகமாயிருக்கிறேன் என்றார்.
இதை வாசிக்கும் அன்பரே, ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் என நினைக்கிறீர்களா? பிறந்ததற்கு ஒரு திட்டம் உண்டு! இயேசுகிறிஸ்துவும் அவருடைய கதையின்படி வாழ்ந்து பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிறார். நீங்களும் தேவனின் சித்தத்தை நிறைவேற்றினால் அவரோடே கூட ஆளுகை செய்யலாம். தேவன் நம்மை மட்டும் விசேஷமாய் தனிப்பட்ட விதமாய் ஒருவரோடொருவர் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவு வைத்துள்ளார். நீங்கள் சாதாரணமானவர்களல்ல! அவரின் திட்டத்தில் இருக்கும் நீங்கள் தனித்துவமானவர்கள்! என்பதை ஒரு நாளும் மறந்து போக வேண்டாம்.
- K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864